கதைகளை ஏன் படிக்கவேண்டும்.
உங்களுடன்...
நம்மில் பலர் கதைகளைக் கேட்டுத்தான்
வளர்ந்திருப்போம். கதைகளில் அப்படி என்னதான் இருக்கின்றது என்ற கேள்வியும்
நமக்குள் எழும். கதைகள் மனிதர்களைச் செதுக்கும் சிற்றுளிகளாக விளங்குகின்றன என்று
சொன்னால் மிகையாகாது.
கதைகளைக் கேட்கக் கேட்க,
கதைப்புத்தகங்களைப் படிக்கப்படிக்க நம் சிந்தனை தொடர்ந்து வளர்ச்சி அடைகின்றது. சிந்தனை
வளர்ச்சி பெருகும்போது இவ்வுலகில் சிறப்பாக வாழும்முறையைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு
ஏற்படும்.
கதைகளைச் செவிவழிக் கதைகள், பாட்டி
சொன்ன கதைகள், முன்னோர்களின் வாழ்க்கைக் கதைகள்,
வரலாற்றுக்கதைகள், புராணக்கதைகள், இதிகாசக்கதைகள், மந்திரவாதி சொல்லும் கதைகள்,
படக்கதைகள், கோட்டுக்கதைகள், பூனை,
எலி, கிளி, காகம் போன்ற உயிரினங்கள் சொல்லும் கதைகள் என்று பல பிரிவுகளாகப்
பிரிக்கலாம்.
தனித்தன்மை வாய்ந்த ஒவ்வொரு
செய்தியும் ஒரு கதையே ஆகும். தனி மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தும்
சுவையாகச் சொல்லுகின்றபோதும் எழுதுகின்றபோதும்
கதைகளாக மாறுகின்றன.
இத்தகைய உயர்வுத் தன்மைகளைப் பெற்ற
கதைகளை நாம் கட்டாயம் வாசித்துப் பொருள்புரிந்து கற்றுக்கொள்ள
வேண்டும். தொடக்கத்தில் அகன்ற வாசிப்பாகத் தொடங்கும் கதை வாசிப்புப் பழக்கம், நம்மை
ஆழ்ந்த வாசிப்புக்குக் கொண்டுசெல்லும் என்பது திண்ணமாகும்.
இவற்றின்மூலம் கதைகளை நாம்
பகுத்துப்பார்க்கும் திறனை வளர்த்துக்கொள்ளலாம். நம்முடைய பகுப்பாய்வுச் சிந்தனை
வளர்ச்சி அடையும்போது நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் பல பிரிச்சினைகளுக்கு
எளிதில் தீர்வுகாணும் வழி பிறக்கும்.
No comments:
Post a Comment