கதையும் சிந்தனையும்
நொறுக்குத்தீனி
முகுந்தன் தொடக்கப் பள்ளியில்
படிக்கும் சிறுவன். அவனுடைய நண்பர்களில் சிலர் நொறுக்குத் தீனியை விரும்பிச்
சாப்பிடுவார்கள். அவர்களிடமிருந்து முகுந்தனும் அப்பழக்கத்தைக் கற்றுக்கொண்டான்.
முகுந்தனின் பெற்றோர்கள் மதிய உணவுக்கு அவனிடம் ஐந்து வெள்ளி கொடுப்பது வழக்கம்.
முகுந்தன் நான்கு வெள்ளிக்கு மதிய
உணவை வாங்கிச் சாப்பிடுவான். மீதம் உள்ள ஒரு வெள்ளியை நொறுக்குத் தீனியை
வாங்குவதற்கு வைத்துக்கொள்வான். நாள்கள் செல்லச் செல்ல முகுந்தன் நண்பர்களைப்போல்
எண்ணெய்ப் பலகாரங்களை விரும்பிச் சாப்பிட ஆரம்பித்தான். அவன் நண்பர்களுடன்
சேர்ந்து பள்ளியின் அருகில் உள்ள விரைவு உணவகத்தில் மதிய உணவை வாங்கி உண்ணத்
தொடங்கினான்.
முகுந்தன் வாய்க்கு ருசியான உணவைத்
தேடிச் செல்ல ஆரம்பித்தான். வீட்டில் உணவு
சாப்பிடுவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கத் தொடங்கினான். முகுந்தனின் உடல் எடை
வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. அதனால், பெற்றோர்களின் கவனம் முகுந்தன் மீது
செல்லத் தொடங்கியது. ஒருநாள் அவனுடைய அம்மா பள்ளிக்குச் சென்று அவனுடைய
நண்பர்களிடம் முகுந்தனைப் பற்றி விசாரித்தார். அப்போதுதான் அவருக்கு உண்மை
தெரிந்தது.
முகுந்தனின் அம்மா முகுந்தனுக்கு மதிய
உணவு சாப்பிடக் கொடுத்துவரும் பணத்தைக்
கொஞ்சங் கொஞ்சமாகக் குறைக்கத் தொடங்கினார். அதற்குப் பதில் பள்ளிக்குச்
செல்லும்போது முகுந்தனுக்குப் பழங்களைக் கொடுத்தனுப்பத் தொடங்கினார். முகுந்தன்
முதலில் பழங்கள் சாப்பிடுவதை வெறுத்தான். நாள்கள் செல்லச் செல்லப் பழங்களை
விரும்பிச் சாப்பிடத் தொடங்கினான். முகுந்தனின் உடல் எடை கொஞ்சங் கொஞ்சமாகச்
சீராகத் தொடங்கியது. அவனுடைய பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
(சொற்களின் எண்ணிக்கை 148)
எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி.
No comments:
Post a Comment