Saturday, November 20, 2021

 கதையும் சிந்தனையும்

எதற்கு விடுமுறை

கமலி கமலி உன்ன எத்தனதடவ சொல்லிட்டேன். காலையில இருந்து இன்னும் சாப்பிடாம டீவியிலே இருக்க. உனக்கு டீவி சோறுபோடுமா. ஏம்மா இது நல்லா இருக்கா. இதுக்குத்தானா லீவு விட்டாங்க என்று கமலியின் அம்மா உரக்கக் கூறினார்.   

வீட்டில் நடக்கும் விசயத்தை ஓர் ஓரத்தில் நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்து கவனித்துக்கொண்டு இருந்தார்,  அப்பாவின் அம்மா முத்துப்பேச்சி. அவரைப் பாட்டி பாட்டி என்று பேரப்பிள்ளைகள் மிகவும் அன்புடன் அழைப்பார்கள்.   

கமலி அம்மா சொன்னா கேட்கவேண்டாமா, டீவியையே பார்த்துக்கிட்டிருந்தா கண்ணு கெட்டுப்போகும். உன் கண்ணாடி பவரக் கூட்டிரும். சொன்னா கேளும்மா என்று பாட்டி அன்பு கலந்த குரலில் தட்டிக்கேட்டார். 

இல்ல பாட்டி, இப்பத்தான் லீவு கிடைச்சிருக்கு. பொழுதைச் சந்தோசமாக் கழிக்க டீவிகூடப் பாக்கவிடலன்னா என்ன பாட்டி, நீங்க சொல்லுங்க என்று டீவியைப் பார்த்துக்கொண்டே பாட்டியிடம் கேட்டாள் கமலி. கமலியின் ஆதங்கம் பாட்டிக்குப் புரியாமலில்லை. என்ன செய்வது, பிள்ளைகளின் கவனம் முழுவதும் டீவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலேயே சென்றுவிடும் என்பது  பாட்டிக்குத் தெரியும். ஒருமாதங் கழித்துப் புத்தகத்தைப் படிப்பதற்குத் திறந்து பார்த்தாலே சலிப்புத்தோன்றும் என்பதையும் நன்கு புரிந்து வைத்திருந்த பாட்டி, சற்றுநேரம் அமைதியாக இருந்தார்.    

கமலி பாட்டியைப்  பார்த்து, என்ன பாட்டி நான் சொல்றது சரிதானே என்றாள். அதனைக் கேட்ட பாட்டி பொறுமையாகக் கமலியிடம்,  பொழுதுபோக்க எவ்வளவோ இருக்கு. அம்மாவுக்கு ஒத்தாசையா கொஞ்சநேரம் சமையல்ல இருந்தா, வருசம்பூராம் சமைக்கிற அம்மாவுக்குக் கொஞ்சம் சந்தோசந்தான. நீயும் பின்னால, ஓம் பிள்ளைகளுக்குச் சமையலைக் கத்துக்கொடுக்கனுமில்ல. இல்லாட்ட நம்ம பாரம்பரியச் சமையல் கொஞ்சங் கொஞ்சமாக மறைஞ்சிறுமில்ல. அதில இருக்கிற மருத்துவக்குணம் தெரியாம்மப் போயிருமில்ல.  அதனாலதாம்மா நான் சொல்லுரங் கமலி என்று சொல்லிமுடித்தார். பிரியமான பாட்டி சொன்ன வாழ்க்கைக் கதையைக் கேட்ட கமலியின் சிந்தனைக் கதவு மெல்லத்திறக்க ஆரம்பித்தது.                       

(சொற்களின் எண்ணிக்கை 180)

                      உரிமை ஆசிரியர் சி. குருசாமி.

 

No comments:

Post a Comment