Thursday, July 29, 2010

சுருக்கி வரைதல்

மாணவர்கள் சுருக்கி வரைதலின் போது கவனிக்க வேண்டிய குறிப்புகள்


சுருக்கி வரைதல் என்றால் என்ன?

ஒருவரின் பேச்சையோ எழுத்துவடிவத்தையோ சுருக்கிச் சொல்வது சுருக்கி வரைதல் ஆகும். இது ஒரு கலையாகும். சுருக்கி வரைதல் நம் வாழ்க்கையில் அன்றாடம் நடைபெறும் ஒரு செயலாகும்.

ஒருவர் பேசிய பேச்சைச் சுருக்கிச் சொல்லும்போது சொல்லவேண்டிய முக்கியமான கருத்தைக் கட்டாயம் சொல்லவேண்டும், இல்லாவிட்டால் பேசியும் பயனில்லாமல் போய்விடும். சுருங்கச் சொன்னால் `சுருங்கச் சொல்லி விளங்க வேப்பதே சுருக்கி வரைதல்` ஆகும்.

ஊடகத்துறையில் சுருக்கி வரைதலின் பயன்பாடு மிகவும் அதிகம். எனவேதான் ஊடகத்துறை நண்பர்கள் இப்பயிற்சியில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள். அவர்கள் சிறந்த பயிற்சிக்குப் பின்னர் சுருக்கி வரையும் திறனில் கைதேர்ந்தவர்களாகி விடுவார்கள்.

சுருக்கி வரையும்போது கவனிக்கவேண்டியவை.

1. கொடுக்கப்பட்ட பகுதியைக் கவனமாகப் படித்துப் பொருளை அறிந்து கொள்ளவேண்டும்.

2. பகுதியில் சொல்லப்பட்ட முக்கியக் கருத்துகளையும் துணைக் கருத்துகளையும் அடையாளம் காணவேண்டும்.


3. பகுதியில் உள்ள கருத்துகளைச் சொந்த நடைக்கு மாற்றவேண்டும்.

4. சொந்தக் கருத்துகளை எழுதிவிடக்கூடாது.


5. பகுதியில் உள்ள உண்மைக் கருத்துகளை மறுத்து எழுதிவிடக்கூடாது.

6. இயல்பான நடையில் எழுதவேண்டும்.


7. முதலில் நகல் ஒன்று தயாரிக்கவேண்டும்.

8. நகலில் மாற்றம் செய்துகொள்ளலாம்.


9. நகலை அடிப்படையாகக் கொண்டு அசல் தயாரிக்கவேண்டும்.

10. கேட்கப்பட்ட சொல் அளவு சரியாக இருக்கவேண்டும்.


11. சிறிய வாக்கியங்களாக எழுதவேண்டும், ஏனென்றால் சிறுவாக்கியங்களில் எழுதினால் வாக்கியப்பிழை ஏற்படாது.

12. தொடர்புடைய சொற்களுக்குப் பதில் கூட்டுச் சொற்களைப் பயன்படுத்தவேண்டும்.


13. வர்ணனை, பழமொழிகள், மேற்கோள்கள், உதாரணங்கள் போன்றவற்றை விட்டுவிடவேண்டும்.

14. பிழை இல்லாமல் எழுதுவதற்கு முயற்சி செய்யவேண்டும்.
15. இணைப்புச் சொற்களைப் (ஆனால், அதனால், எனவே, என்றாலும்) பயன்படுத்தவேண்டும்.

16. கொடுக்கப் பட்ட பகுதி பல பத்திகளாக இருந்தாலும் சுருக்கி வரையும்போது ஒரே பத்தியில் எழுதவேண்டும்.

17. சுருக்கி வரையச் சொல்லும் பகுதியைத் தான் சுருக்கி எழுதவேண்டும்.

18. சுருக்கி வரைந்த பின்னர் சொற்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடவேண்டும்.


(எ - டு)

ஒருகாட்டில் சிங்கம், புலி, கரடி, மான் போன்ற விலங்குகள் ஏராளம் வசிக்கின்றன. சிங்கத்தைப் பார்த்தாலே எல்லா விலங்குகளும் பயந்து நடுங்கும். சிங்கம் நாள்தோறும் தனக்குப் பிடித்த விலங்குகளை வேட்டையாடித் தின்னும். மானின் மாமிசமே சிங்கத்திற்குப் பிடித்தமான உணவு. அதனால், மான்கள் சிங்கத்தைக் கண்டால் மிகவும் வேகமாக ஓடி ஒளிந்துகொள்ளும்.

சிங்கம் ஒரு மானைப் பிடித்து உண்ண நினைத்தால் அந்த மானை மட்டுமே விரட்டிச் செல்லும். ஓடுகிற மான் களைப்பு அடைந்தவுடன் அது சிங்கத்திற்குப் பலியாகிவிடும். பிடித்த மானின் மாமிசத்தை வயிற்றுக்கு உண்டபின் சிங்கம் தன் இருப்பிடத்தை நோக்கிச் செல்லும். இருப்பிடத்தில் நன்றாக ஓய்வு எடுத்தபின்னர் அது சுறுசுறுப்புடன் செயல்படும்.

மாணவர்களே! இங்கே குறிக்கப்பட்டுள்ள முக்கியக் கருத்துகளை முதலில் பார்ப்போம்
.

1. காட்டில் ஏராளமான விலங்குகள் வசிக்கின்றன
2. மற்ற மிருகங்கள் சிங்கத்தைப் பார்த்தால் அஞ்சும்
3. மானின் மாமிசமே சிங்கத்திற்குப் பிடித்த உணவு
4. மான்கள் ஓடி மறையும்
5. ஓடும் மானை விரட்டிப் பிடித்து உண்ணும்
6. இருப்பிடத்தில் ஓய்வு எடுத்தபின்னர் சுறுசுறுப்பாகிவிடும்

விளக்கம்

மேலே குறிப்பிட்டுள்ள பகுதியைச் சுருக்கி எழுதும்போது பகுதியில் குறிப்பிட்டுள்ள ஆறு கருத்துகளையும் விட்டுவிடக்கூடாது.

இந்த ஆறு கருத்துகளையும் அடையாளம் பார்த்த பின்பு அவற்றை ஒரே பத்தியாக எழுதவேண்டும்.

(எ-டு) சுருக்கிய பகுதி

காட்டில் வாழும் மிருகங்கள் சிங்கத்தைக் கண்டால் அஞ்சும். மானின் மாமிசத்தைச் சிங்கம் வரும்பிச் சாப்பிடுவதால் அதனை விரட்டிப் பிடித்துத் தின்னும். அது இருப்பிடத்தில் ஓய்வு எடுத்த பின்னர் சுறுசுறுப்புடன் இருக்கும்.

சொற்களின் எண்ணிக்கை 22

பகுதி 2.

அழகான மயில்கள் கருமேகக் கூட்டம் வானில் திரண்டு நிற்பதைக் கண்டன. உடனே, அவை தங்களுடைய நீண்ட அழகிய வண்ணத் தோகையை விரிக்கத்தொடங்கின. அவற்றின் தோகை விசிறியைப் போல் அழகாக விரிந்தன. விரிந்த தோகை பார்ப்பவரின் மனத்தைக் கவரும் வண்ணம் இருந்தது. மயில் தோகையின் அழகிய வண்ணத்தைக் கண்டவர்கள் வாய்திறந்து பார்த்த வண்ணம் இருந்தனர். மயில்கள் அவர்களைக் கவனிக்காமல் வானத்தைப் பார்த்து இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தன.

விளக்கம்

இப்பத்தியில் வர்ணனையும் உவமையும் இடம்பெற்றுள்ளன. இவற்றைச் சுருக்கி எழுதும்போது எழுதக்கூடாது.
கருத்தை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

சுருக்கி வரைதல்


நகல்
மயில்கள் மேகத்தைக் கண்டு தோகையை விரித்து ஆடின. அழகிய தோகையினை வியப்போடு பார்த்தனர். அவர்களைப் பார்க்காமல் மயில்கள் வானத்தைப் பார்த்து இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தன. (20 சொற்கள்)

அசல்

மயில்கள் மேகத்தைக் கண்டவுடன் தோகையை விரித்தன. அதனைக் கண்டவர்கள் தன்னை மறந்து பார்த்தனர். ஆனால், மயில்கள் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தன.

சொற்களின் எண்ணிக்கை 15


உயர்தமில்மானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பனுவலைப் படித்த பின்னர் இருபது சொற்களில் சுருக்கி எழுதவும்.

பயிற்சி 1.

மனிதனின் வாழும் காலத்தைக் கணக்கிட்டு அறிஞர்கள் பல பருவங்களாகப் பிரிக்கின்றனர். அவற்றுள் ஒன்று பள்ளிப் பருவம். பள்ளிப் பருவம் மற்ற பருவங்களைவிட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பருவமாகக் கருதப்படுகிறது. இப்பருவத்தை ஒருவர் பயன்படுத்திக் கொள்வதைப் பொறுத்துத்தான் அவரின் எதிர்கால வாழ்க்கை அமையும். உயர்நிலைப் பள்ளிப் பருவத்தில் நாம் பல முக்கியமான செயல்களில் ஈடுபடுகிறோம். எனவே, இதனை மாணவர்களின் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பருவம் என்று குறிப்பிடலாம். இப்பருவத்தில் நாம் கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டும். காலத்தைப் பொன்போல் போற்றி வரவேண்டும்.

சுருக்கி எழுதவும்


________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

பயிற்சி 2 இருபது சொற்களில் சுருக்கி எழுதவும்.

தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெற்றோருடன் உண்டு உறங்கி மகிழ்கிறார்கள். அவர்கள் உயர்நிலைப் பள்ளிக்கு வந்தவுடன் படிக்கும் பாடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அவர்களுக்குக் குழந்தைப் பருவம் மாறத்தொடங்குகிறது. அதனால், பெற்றோருடன் பேசும் நேரத்தைச் சிறிது சிறிதாகக் குறைத்துக் கொள்கிறார்கள். இக்காலத்தில் தொடக்கப் பள்ளியில் இருந்த மென்மைக் குணம் சற்று வலிமைபெறத் தொடங்குகிறது. அவர்களிடம் தன்னம்பிக்கை சிறிதளவு கூடுகிறது.


இந்தத் தன்னம்பிக்கையைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளும் போது அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்குரிய வாய்ப்பு ஏற்படும். மாணவர்கள் தங்களுக்குக்கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தினால் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையும்.

இருபது சொற்களில் சுருக்கி எழுதவும்.


________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________



உயர்தமிழ் மாணவர்கள் கீழ்க்கண்ட பனுவலைப் படித்து இருபத்து ஐந்து சொற்களில் சுருக்கி வரையவும்.

பயிற்சி 1.

மாணவர்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தவுடனே நண்பர்களைத் தேர்ந்தெடுக்காமல் சிறிதுகாலம் தம்முடன் பயிலுபவர்களின் குணத்தினை ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஆராய்ந்து பார்க்காமல் பழகும் பழக்கம் மிகப்பெரிய துன்பத்தைத்தரும் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். எனவே, நல்லவர்களை நண்பர்களாக ஆக்கிக்கொள்ள முயற்சி செய்தால் சிறந்த நன்மை உண்டாகும். நாம் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள் நமக்குக் கல்வியிலும் வாழ்க்கையிலும் உதவி செய்பவர்களாக இருக்க வேண்டும்.

நண்பர்கள் நம்மைவிட அறிவில் உயர்ந்தவர்களாகவோ சமநிலை உடையவர்களாகவோ இருக்கலாம். அவர்கள் நம்மோடு தொடக்கப் பள்ளியில் படிக்காத மாணர்களாக இருந்தாலும் பரவாயில்லை. நம் நண்பர்கள் அறிவும் ஆற்றலும் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். நண்பர்கள் அறிவும் ஆற்றலும் நிறைந்தவர்களாக இருந்தால் நமக்கு அவர்கள் கலங்கரை விளக்கம் போல் வழிகாட்டுவார்கள். எனவேதான் நீ உன் நண்பனை முதலில் சொல் உன்னைப் பற்றி நான் சொல்கிறேன் என்று பெரியர்கள் கூறுவார்கள்.


இருபத்து ஐந்து சொற்களில் சுருக்கி எழுதவும்
_____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
__________________________________________________________________________________________________________________________

பயிற்சி
பொதுவாக நாம் தேர்ந்தெடுக்கும் நண்பர்களைப் பொறுத்தே நம் எதிர்காலம் அமையும். எனவே, நட்பின் சிறப்பினைப் பற்றிக் கூறவந்த பழைய பாடல் ஒன்று கரும்பின் மேல் பாகத்திலிருந்து கடித்துத் தின்பதைப் போல் பழகப்பழக நட்பு இனிப்பு நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இங்கு இனிப்பு என்பது நமது மனத்தையும் வாழ்க்கை முறையில் ஏற்படும் மகிழ்ச்சியையும் குறிக்கும்.

ஒருவேளை நாம் தவறான நண்பர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டால் கவலைப்படக்கூடாது. தவறான இயல்பினை உடைய நண்பர்களிடம் உள்ள நல்ல குணத்தை மட்டும் நாம் பெற்றுக் கொள்ளவேண்டும். நம்மிடம் உள்ள பண்பு நிறைந்த குணத்தை அவர்களிடம் சிறிது சிறிதாக வளர்க்க முயல வேண்டும். இவ்வாறு நாம் செய்தால் நல்ல குடிமக்களை உருவாக்கிய பெருமை நம்மைச் சேரும்.


இருபத்து ஐந்து சொற்களில் சுருக்கி எழுதவும்

_____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
_______________________________________________________________________________________________________________________________________________________________________________________

தயாரித்தவர்
ஆசிரியர் சி. குருசாமி
29.07.2010