Friday, June 17, 2022

 

கழுகு வேட்டை


பெரிய காட்டில் முற்புதர்கள் நிறைந்து இருந்தன. அங்குக் காட்டுக்கோழிகள் அதிகம் இருந்தன. ஒரு காட்டுக்கோழி தன்னுடைய முட்டைகளை முட்புதரின் அடியில் பத்திரமாக  வைத்து அடைகாத்து வந்தது.  ஒருநாள் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவந்தன. அவற்றைக் கண்ணும் கருத்துமாகத் தாய்க்கோழி பாதுகாத்து வந்தன. தாய்க்கோழி சில நேரங்களில் முட்செடிகளுக்கு வெளியே தன்னுடைய குஞ்சுகளைக் கூப்பிட்டுச் செல்லும். அப்போது  அவைகளுக்கு இரை தேடுவதற்கு அது கற்றுக்கொடுக்கும். 

காட்டுக்கோழியின் செயலினை ஒரு கழுகு கவனித்து வந்தது. அது கோழிக்குஞ்சுகளைத் தின்பதற்கு நினைத்தது. அதனால், ஒரு நாள் கோழிக்குஞ்சுகளை நோக்கிப் பறந்து வந்தது. இதனைத் தாய்க்கோழி கவனித்து விட்டது.  அது மிகவும் ஆற்றலுடன் கழுகை எதிர்த்துப் போராடியது. கழுகு தான் தப்பித்தால் போதும் என்று நினைத்தது. அது வேகமாக வானில் பறந்து சென்றது.

கழுகின் செயல் காட்டுக்கோழிக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இருந்தாலும் கழுகு மீண்டும் வந்து தன்னுடைய குஞ்சுகளைப் பிடித்துத் தின்றுவிடும் என்று காட்டுக்கோழி  நினைத்தது.  அது ஒரு தந்திரம் செய்தது. முட்புதரின் அருகில் தன்னுடைய குஞ்சுகளை  இரை தின்பதற்குப் பயிற்சி அளித்து வந்தது. அவை இரை தின்னும்போது  தாய்க்கோழி உரத்த ஓசை ஒன்றை எழுப்பும். அதனைக்  கேட்டதும் குஞ்சுகள் மின்னல் வேகத்தில் முட்புதருக்குள் சென்று மறைந்து  விடும். இப்படியே தாய்க்கோழி குஞ்சுகளைப் பழக்கி வந்தது. 

ஒருநாள் குஞ்சுகள்  இரை தின்னும்போது கழுகு வேகமாகப் பறந்து வந்தது. அது குஞ்சுகளைப் பிடிக்கச் சென்றது. அதனைக் கவனித்த  தாய்க்கோழி வழக்கம்போல்  உரக்கச் சத்தமிட்டது. குஞ்சுகள் முட்புதருக்குள் சென்றுவிட்டன. வேகமாகப் பறந்து சென்ற கழுகு முட்புதரில் அகப்பட்டுக்கொண்டது. அதிலிருந்து வெளியேறமுடியாமல் அது பட்டினிகிடந்து இறந்து விட்டது. 

                                                                                 - சிகு

 

Thursday, June 16, 2022

 

துள்ளிச் செல்லும் நேரம்


பள்ளி செல்லும் நேரம்

பார்த்துச் செல்ல வேண்டும்

துள்ளிச் செல்லும் நேரம்

துவண்டிடாதே நீயும் 


வண்டி வரும் நேரம்

வளைந்து செல்லும் பாதை

பார்த்துச் செல்ல வேண்டும்

பதறாமல்  என்றும் நீயே!


முந்திச் செல்வர் பார்த்து 

முணங்கிச் செல்ல வேண்டாம்

சிந்தை மாறிப் போகும் 

சிரிக்க மறந்து போவாய்!!


எங்கவீட்டுத் தங்கமே

எங்குபோன போதும்

எங்களை நினைத்துப் பாரு

எல்லாம் மறந்து போகும்!!


இலக்கு ஒன்றை வகுப்பாய்

இழந்திடாமல் நிற்பாய்

உச்சி சென்ற போதும்

உதவ மறந்திடாதே!!


பாட்டி சொல்லிய கதையில்

பார்த்துவாழ அறிவாய்

பகிந்து உண்ணத் தெரிவாய்

பகுத்தறிவை வளர்ப்பாய்!!.

                                                      - சிகு





 

சின்னச் சின்ன குருவி


சின்னச் சின்ன குருவி

சிங்காரக் குருவி 

வண்ண வண்ணக் குருவி

வடிவான குருவி!


வசந்தத்தை நாடிச் செல்லும்

வனமெங்கும் பறந்து செல்லும்

ஐந்தாறு நெற்களுக்கு 

ஐந்துமயில் பறந்திடுமே!!


அயர்வில்லா உழைப்பினை

அகிலத்திற்குக் காட்டிடுமே

சின்னச் சின்ன குருவி 

சிங்காரக் குருவி!!

                          - சிகு

Friday, June 10, 2022

 

மற்றவர் காண!


கணக்கற்ற வடிவத்தைக் காட்சிப்படுத்தி

மனத்திரையில் பதிந்ததை மற்றவர்காண

பொறுப்பில் உள்ளோர் புகழினைப் பரப்ப 

என்றும் அழியா அற்புத வடிவமாக்கி


எண்ணத் திரையில் விண்ணைப் பதித்தனர்

வண்ணத் திரையில் வாழ்வைக்  காட்டினர்

கடுகளவைக் கடலளவாய்க் காட்டிடும் உலகில்

கடலளவைக் கடுகளவாய் காட்டி நின்றனரே



நெற்றிவியர்வை  தனில்நிலம் குளித்திட

 

 

கல்லனைத்தும் காட்சியாக்கி 

கற்பனையை வடிவமாக்கி 


பல்வன் படைத்து தமிழரை உயர்த்தினான்

 

அங்கமெல்லாம் சோர்ந்தாலும் என்றும் அயர்வதில்லை மனத்தாலே

நன்றி கொண்ட மனம்வேண்டும் என்பதை நமக்குக் காட்ட

நல்முத்திரையாக்கி நிலைக்க வைத்தனரே

 

வாழ்வோர் அறிந்திட வகைவகையாய்

படைத்தனரே முத்திரை வடிவில்

காட்சியாகப் படைத்தனரே அச்சுதனில்

 

ஊற்றை பெருகச் செய்து  கொடுக்கும் சரித்திரம்தனை

Monday, June 6, 2022

 

விதையும் விருச்சமும்


விதையில்லாமல் விருச்சம் ஏது

வினையில்லாமல் விளைவு ஏது

வினையே புவியில் விளைந்து

விண்ணில் கலையாய் மலர்ந்தது!

 

கடுகளவைக் காற்றளவாக்கிடும் உலகில்

காலமெல்லாம் கற்பனையில் நனைந்து

கற்றதைப் படைத்துக் காட்டிடுவர்

கற்றறிந்த கலைஞர் தானே!

 

வற்றிய கண்ணும் வடிவத்தைக் கொடுத்திட

வற்றாத மனமும் வாழ்வினை அளித்திட  

கற்பனைக் கெட்டா அற்புத வடிவம்தனை

கலையாகப் படைத்து வாழ்ந்தனரே!!


எழுதியவர் சி.கு


 

 

 

 

 

காட்டியவை மறைந்திடா வண்ணம்

காண்பவர் வாழ்வியல் திறனைக்கற்றிட  

முறைமாறா முழுவடி மனைத்தும் 

முத்திரை யாக்கினர் மூதறிஞர்களே!

 

 

நன்றி செப்புவோம் நாமும் என்றும்

நாம்வாழ வழிசெய்த உழைத்தோர்தமை  

ஊருக்குக் காட்டிய உன்னதத் தலைவர்களை

உளம்நிறைய வாழ்த்தி வணங்குவோமே!


முதலில் சென்றது 



 அவன் கடைக்குப் போனான்.

நான் பார்த்து மகிழ்ந்தேன்

அது முதலில் நடந்தது

ழுழுச் செயல் நடந்ததில்லை


நெஞ்சம் மறந்ததில்லை 

நினைவு மறையவில்லை

என்றும் நிலைத்து நிற்கும்

எல்லாருக்கும் நடப்பதுண்டு.


Sunday, June 5, 2022

 முக்கனி

 

·        மா, பலா, வாழை ஆகிய மூன்றும் முக்கனி ஆகும்.  

·        முக்கனிகள் மிகவும் சுவை உள்ளவை

·        தமிழ்நாட்டில் இம்மூன்று பழங்களும் அதிகம் விளைகின்றன

·        இவை மருத்துவக் குணம் நிறைந்தவை

·        உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் இம்மூன்று கனிகளிலும் இருக்கின்றன

·        முக்கனிகளைக் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவர்.

·        மக்கள் முக்கனிகளைச் சில நேரங்களில் உணவுக்குப் பதில் உண்பர்

·        இக்கனிகளிலிருந்து `முப்பழம்` என்ற சுவையுடைய  பழக் கலவையைத் தயாரிப்பார்கள்

·        தமிழர்கள் பெரும்பாலும் முப்பழத்தை விழாக்காலங்களில் தயாரிப்பார்கள்

·        இம்மூன்று கனிகளின் மரங்களும் மக்களுக்கு மிகவும் பயன்படுகின்றன

·        இம்மூன்று மரங்களிலும் மருத்துவப் பயன்கள் உள்ளன என்று கூறுவர்

·        பண்டையத் தமிழ்நாட்டை ஒன்றிணைக்கும் பழங்களாக இவை விளங்குகின்றன

·        சேரநாட்டில் பலாக்கனிகளும், சோழநாட்டில் வாழைப்பழங்களும், பாண்டியநாட்டில் மாங்கனிகளும் அதிகம் விளைகின்றன

·        முக்கனிகள் தமிழரின் ஒற்றுமைப் பண்பாட்டைப் பிரதிபலிக்கின்றன

·        இன்றும்கூடத் தமிழ் நாட்டில் இம்மூன்று மரங்களையும் வீட்டைச் சுற்றி வளர்ப்பர்

·        `ஒன்றுபட்டால் உயர்வைப் பெறலாம்` என்ற உயரிய தத்துவத்தை விளக்குவதற்கு நம்முன்னோர் `முக்கனி` என்ற பொருள் நிறைந்த சொல்லை மக்களிடம் அறிமுகப்படுத்தினர் எனக்கூறலாம்.

 

 

·        மா, பலா, வாழை வரிசை அமைப்பு முறை

 

·        மாமரம் அதிகக் கிளைகளையும் காய் கனிகளையும் உடையது. இதன் கிளைகளும் காய்களும் நெருக்கம் நிறைந்தவை. அதுபோல் குடும்பத்தில் உள்ளவர்களும் பிணைப்பு மிக்கவர்களாகவும் பயன் உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். இதனால், நம் முன்னோர், மூன்று மரங்களில் மாமரத்திற்கு முதலிடம் கொடுத்தனர்.

 

·        பலா மரம் குறைந்த அளவு கிளைகளையும் சில பழங்களையும் உடைய மரம். பலா பழத்தை அரிய முயற்சிக்குப் பின்புதான் சுவைக்க முடியும். அதுபோல, நம்முடைய இலட்சியத்தை அடைவதற்குக் கடுமையாக முயற்சி செய்யவேண்டும். இறுதியில் நாம் இலட்சியத்தின் மூலம் இனிய  இன்பத்தை அடையலாம்.  அதனால், நம் முன்னோர்  பலாவை வரிசையில் இரண்டாம் இடத்தில் வைத்தனர்.

 

·        வாழை மரத்தில் கிளைகள் இல்லை. இது ஒரு குலையில் இனிய சுவையுடைய பல பழங்களைத் தரும்.  அதன் இனம் `வாழையடி வாழையாகத்` தொடர்ந்து வாழும். அதுபோல, மனித இனமும் இலட்சியத்துடன் தொடர்ந்து வாழவேண்டும் என்பதைக் குறிப்பதற்கு வாழை மரத்தை இம் மூன்று மரங்களில் மூன்றாவது இடத்தில் வைத்தனர்.   

 

 

தயாரித்தவர் – ஆசிரியர் சி. குருசாமி


 

தமிழ் மாதங்கள் பற்றிய விளக்கம்

 

மனித வாழ்க்கையில் காலம் மிகமுக்கிய இடத்தைப் பெறுகிறது. காலத்தின் சிறப்பினை இவ்வுலகில் வாழ்ந்த முன்னோர் பலரும் உணர்ந்துள்ளனர். அவர்கள் வாழ்க்கையின் அடிப்படையில் காலத்தைப் பிரித்துள்ளனர். இக்காலம் பெரும்பாலும் இயற்கை அமைப்பைப் பொறுத்து அமைந்துள்ளது. இயற்கையின் தன்மையினையும் மாறுபாட்டையும்  உணர்ந்த முன்னோர் அவற்றைப் பல நிலைகளாகப் பகுத்துள்ளனர். இந்தப் பகுப்பின் ஒட்டுமொத்தமே ஆண்டாகக் கணக்கிடப்படுகிறது. ஆண்டினை மாதங்களாகப் பிரித்தனர். மாதத்தை வாரங்களாகவும் வாரத்தை நாட்களாகவும் பிரித்தனர்.

 

நம் முன்னோரும்  காலத்தைக் கணிப்பதில் சிறந்தவர்களாக இருந்துள்ளனர். அவர்கள் வானவியலைப் பற்றி நன்றாகத் தெரிந்துள்ளனர். இதனை அவர்கள் அனுபவத்தின் வாயிலாக உணர்ந்துள்ளனர். அவர்கள் சில நட்சத்திரங்களைக் கண்டறிந்து அவற்றிற்குப் பெயரிட்டுள்ளனர். மேலும், அவை எக்காலகட்டத்தில் தோன்றும் எக்காலகட்டத்தில் மறையும் என்பதையும் நன்றாக அறிந்துள்ளனர். பண்டைய இலக்கியங்களில் நட்சத்திரங்களை விண்மீன் என்று குறிப்பிட்டுள்ளனர். குறிபபாக விண் மீனைப் பற்றிய செய்தியினைப் புறநானூறு, அகநானுறு சிலப்பதிகாரம் போன்ற பழம்பெரும் தமிழ் இலக்கியங்களில் காணலாம்.

 

தமிழ் நாட்டின் கிராமப் பகுதியில் வாழும் மக்களில் பெரும்பாலோர் இன்றும் ஒரு நாளின் காலைப் பொழுது எப்பொழுது தோன்றும் என்பதையும் மாலைப் பொழுது எப்பொழுது வந்து ஒருநாள் முடியும் என்பதையும் வானத்தைப் பார்த்துக் கூறுவர். இவர்களில் பெரும்பாலோர் கடிகார நேரத்தைப் பார்ப்பதில்லை. மேலும்மழை பெய்யத் தொடங்கும் காலத்தையும் மழை பெய்யும் திசையையும் வானத்தைப் பார்த்தே கணக்கிடுவர். 


இயற்கை மாற்றங்களை மனத்தில் கொண்டு இவ்வருடம் செழிப்பு நிறைந்திருக்குமா? நிறைந்திருக்காதா? என்பதையும் முன்கூட்டியே சொல்லிவிடுவர். இதற்கு இவர்கள் அவ்வாண்டில் ஏற்படும் வெய்யில், பனி, குளிர், காற்று போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுவர். இக்கணிப்பு காலம் காலமாகத் தொடர்ந்து நிகழ்ந்து வருவதை நாம் காணலாம்.

 

மாதங்களின் பெயர் - பொதுவாக வழங்கும் காரணம்

 

பூமி ஒரு முறை சூரியனைச் சுற்றி வருவதைக் கணக்கில் கொண்டு தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. அந்த ஒரு முறைக்கு உரிய காலத்தை ஆண்டு என்று பெயரிட்டனர். ஓர் ஆண்டைப் பன்னிரண்டு மாதங்களாகப் பிரித்தனர்.

 

தமிழ் மாதங்கள் பன்னிரண்டு ஆகும்.

 

வரிசை எண்

மாதங்களின் பெயர்

 

வரிசை எண்

மாதங்களின் பெயர்

1

சித்திரை

 

7

ஐப்பசி

2

வைகாசி

 

8

கார்த்திகை

3

ஆனி

 

9

மார்கழி

4

ஆடி

 

10

தை

5

ஆவணி

 

11

மாசி

6

புரட்டாசி

 

12

பங்குனி

 

தமிழ் மாதங்களில் இடம்பெறும் ஆங்கிலமாதங்களும் தேதியும்

 

வரிசை எண்

தமிழ் மாதங்களின்  பெயர்

தமிழ் மாதங்களில் வரும் ஆங்கில

மாதங்களின் பெயரும் தேதியும்

1

சித்திரை

ஏப்ரல் 14 - மே 14

2

வைகாசி

மே 15 – ஜூன் 14

3

ஆனி

ஜூன் 15 - ஜூலை16

4

ஆடி

ஜூலை 17 - ஆகஸ்ட்16

5

ஆவணி

ஆகஸ்ட் 17 - செப்டம்பர்16

6

புரட்டாசி

செப்டம்பர் 17 - அக்டோபர் 17

7

ஐப்பசி

அக்டோபர் 18 -  நவம்பர்16

8

கார்த்திகை

நவம்பர்17 - டிசம்பர் 15

9

மார்கழி

டிசம்பர்16 - ஜனவரி13

10

தை

ஜனவரி14 - பிப்ரவரி12

11

மாசி

பிப்ரவரி13 - மார்ச் 14

12

பங்குனி

மார்ச்15 - ஏப்ரல் 13

 

மிழ் மாதங்களும் பருவநிலையும்

 

தமிழ்மாதங்கள்  பன்னிரண்டை பருவநிலை அடிப்படையாகக் கொண்டு ஆறு பிரிவுகளாகப் பிரித்தனர். ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு மாதங்கள் இடம் பெற்றன. இந்த ஆறு பருவங்களும் பெரும் பொழுது என்று என்று பெயரிட்டனர்.

வரிசை

மாதங்களின் பெயர்

பெரும்பான்மைக் காலம்

(பெரும் பொழுதுகள்)

1

சித்திரை, வைகாசி

வெயில் காலம்

 

2

ஆனி, ஆடி

வெயில் காலம்

3

ஆவணி, புரட்டாசி

மழை காலம்

4

ஐப்பசி, கார்த்திகை

குளிர்காலம்

5

மார்கழி, தை

மாலை நேரத்திற்குப் பின் பனி உள்ள காலம்

6

மாசி, பங்குனி

அதிகாலையில்

பனி உள்ள காலம்

 

நம் நாட்டிலும் பெரும்பாலும் இத்தகைய பருவ நிலைகளை நாம் காணலாம்.

தமிழ் மாதங்களின் சிறப்பு:

 

சித்திரை, வைகாசி மாதங்களின் சிறப்பு

 

தமிழ் மாதத்தின் வருடப் பிறப்பு சித்திரை மாதம் முதல் நாள் இடம் பெறுகிறது. தமிழர்கள் இந்நாளை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். உறவினர்களை ஒன்று சேர்க்கும் காலமாக இது இன்றும் தமிழ்நாட்டில் விளங்கிவருகிறது.  சோழர் காலத்தில் இம்மாதம் மிகவும் சிறப்புப் பெற்ற மாதமாக விளங்கியது. 


சிலப்பதிகாரம் என்ற தமிழ் நூல் பௌர்ணமி விழா கடற்கரையில் கொண்டாடப்பட்டதைக் குறிக்கிறது. இக்காலத்தில் வெய்யில் அதிகமாக இருக்கும். அதனால் அம்மை நோய் ஏற்படும். அந்நோயைக் குணப்படுத்த  வேப்ப இலையையும் மஞ்சளையும் மிகச்சிறந்த மருந்துப் பொருளாகத் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

 

 வைகாசி மாதம் கோடைவிழா நடைபெறும். மக்கள் ஆட்டம் பாட்டம் போன்றவற்றில் ஈடுபடுவர். இம்மாதத்தில் தென்றல் காற்று வீசத்தொடங்கிவிடும். மேலும், சாரல் மழை தொடங்கிவிடும். எனவே, கோடையின் வெப்பம் இம்மாதத்தில் தனியத்தொடங்கும். மலைப் பகுதிகளில் உள்ள நீர்வீழ்ச்சிகளுக்கு மக்கள் சென்று மகிழ்ச்சியாக நீர்விளையாட்டுகளில் ஈடுபடுவர். அப்பகுதிகளில் கிடைக்கும் பழங்களையும் வாசனைப் பொருள்களையும் மருத்துவப் பொருள்களையும் சமையல் பொருள்களையும் வாங்கிவந்து பயனடைவர்.

 

ஆனி, ஆடி மாதங்களின் சிறப்பு

 

ஆனி மாதத்தில் மக்கள் வேளாண்மைத் தொழிலுக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்வர். இம்மாதத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக இடையிடையே மழை பெய்யத்தொடங்கும்.

இது சாரல் மழையாகவும் இருக்கலாம். வயல்களை உழுவதற்கு இம்மாதம் ஏற்றதாக அமையும்.

 

ஆடி மாதத்தில் காற்று மிகவும் அதிகமாக இருக்கும். ``ஆடிக்காற்று அம்மியையும் நகற்றும்`` என்ற பழமொழி ஒன்று இக்காற்றின் வலிமையைக் குறிக்கிறது. இக்காலத்தின் சிறப்பினைச் சிலப்பதிகாரம் என்ற நூலில் காணலாம். புதுமணத் தம்பதியினரைப் பெண்வீட்டார் அழைத்து வந்து அவர்களுக்குச் சிறப்புச் செய்வர்.


``ஆடிப்பட்டம் தேடி விதை`` என்ற பழமொழிக்கு ஏற்ப இப்பருவத்தில் வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுவர். வயல்களில் விதை விதைக்கத் தொடங்குவர். புதுவெள்ளம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும். ஆற்றங் கரையில் ஆடிப் பெருக்கு விழா நடைபெறும். குறிப்பாக, காவிரி, வைகை, தாமிரபரணி போன்ற ஆறுகளின் ஆற்றங்கரைப் பகுதியில் இவ்விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

 

 ஆவணி, புரட்டாசி மாதங்களின் சிறப்பு: 

 

ஆவணி மாதத்தில் மழை அதிகமாகப் பெய்யும். திருமணம் இம்மாதத்தில் நடைபெறும். இது திருமணத்திற்கு ஏற்ற காலமாகக் கணக்கிடப்படுகிறது. இம்மாதத்தின் பருவம் மக்கள் வாழ்க்கைக்கு ஏற்ற பருவமாக இருக்கிறது. இப்பருவத்தில் மகிழ்ச்சி அடையும் மக்கள் சூரியனுக்கு நன்றி செலுத்துவர். இயற்கை வழிபாடு இம்மாதத்தில் சிறப்பிடம் பெறுகிறது.

 

ஆவணியில் தொடங்கும் கனத்தமழை இம்மாதத்திலும் பெரும்பாலும் பெய்யும். கண்மாய்களிலும், ஆறுகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடும். வேளாண்மைத் தொழிலில் அதிகமாக ஈடுபடுவர். 


இயற்கை மூலிகைத் தாவரங்கள் அதிகமாக நிலத்தில் தோன்றும். துளசி, அருகம்புல் போன்றவற்றை மக்கள் தங்களின் தேவைக்குப் பயன்படுத்தத் தொடங்குவர். 

 

ஐப்பசி, கார்த்திகை மாதங்களின் சிறப்பு

 

தொடர்மழை அதிகமாக இருக்கும். மழையின் காரணமாக குளிர் மிகவும் அதிகமாக இருக்கும். இம்மாதத்தில் திருமணங்கள் அதிகம் நடைபெறும். புதுமணத் தம்பதிகள் தங்களின் புதிய உறவுமுறைகளுடன் தொடர்பு கொள்வர். தீபாவளித் திருநாள் இம்மாதத்தில் நடைபெறும். மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர். ஆடு, மாடு போன்ற உயிரினங்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.  அவற்றிற்கு வேண்டிய தீனி எளிதில் கிடைக்கும்.

 

கார்த்திகை மாதத்தில் மழை குறையத்தொடங்கும். இம்மாதத்தில் குளிர் அதிகமாகத் தோன்றும். மக்கள் குளிரின் தொல்லையில் மிகவும் துன்பம் அடைவர். பாம்பு, பல்லி போன்ற உயிரினங்களில் தொல்லை பெருகும். இவற்றை ஒழிப்பதற்கு தீபத்திருநாள் என்று சொல்லப்படும் கார்த்திகைத் திருநாளைக் கொண்டாடுவர். சிறுவர்களும் பெரியோர்களும் ஒன்றுகூடிக் தீயூட்டி குளிரைப் போக்குவர். இதில் உறவுமுறை வலுப்பெறும் வாய்ப்பும் குழுவுணர்வு பெருகும் வாய்ப்பும் ஏற்படும். 

 

மார்கழி, தை மாதங்களின் சிறப்பு

 

மார்கழி மாதத்தில் குளிர் மிகவும் அதிகமாக இருக்கும். திருப்பாவை திருவெம்பாவை போன்ற இலக்கிய நூல்கள் இம்மாதத்தில் சிறப்பிடம் பெறுகின்றன. இம்மாதத்தின் இறுதி நாளில் பழையன கழிதலும் புதியன புகுதலும் நடைபெறும். இந்நாளில் போகிப்பண்டிகை எனப்படும் கழிவுப் பொருள்களைப் போக்கும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தின் சிறப்பினைப் பற்றிக் கூறவந்த கவிஞர் கண்ணதாசன்,

 

``மாதங்களில் அவள் மார்கழி

       மலர்களிலே அவள் மல்லிகை`` என்று அழகாகக் கூறுவார்.

 

தை மாதத்தில் பனி அதிகமாக இருக்கும். ``தை மாதப் பனி தரையைப் பிளக்கும் `` என்பது பழமொழி ஆகும். இம்மாதத்தில் உழவர்களின் வாழ்வு செழிக்கும். வயல்களில் விளைந்த பொருள்களை இல்லங்களுக்குக் கொண்டு வந்து மகிழ்வர். தைமாதத்தின் முதல் நாள் மிகவும் சிறப்புப் பெற்ற நாளாகும். 


பெரும் பொங்கல் எனப்படும் தைப்பொங்கல் விழா இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இதன் மறுநாள் மாடுகளுக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மூன்றாவது நாள் காணும் பொங்கல் எனப்படும் கன்னிப் பொங்கல் விழா நடைபெறுகிறது. இன்று பெண்களும் உறவினர்களும் முக்கிய இடத்தைப் பெறுகின்றனர். உழவர்களின் கையில் அதிகமாகப் பணம் புழங்கும். திருமணங்கள் இம்மாதத்தில் நடைபெறும்.

 

மாசி, பங்குனி மாதங்களின் சிறப்பு

 

மாசி மாதமும் பனி காலமாகும். இக்காலத்தில் பெய்யும் பனியினை  இலக்கியங்கள் பின்பனி என்று குறிப்பிடுகின்றன. பின்பனி என்பது காலைப் பொழுதில் பெய்யும் பனியாகும். இப்பனியின் தன்மையை ``மாசிப் பனி மச்சைப் பிளக்கும்`` என்று குறிப்பிடுவர். இம்மாதத்திலும் திருமணங்கள் நடைபெறும். இம்மாதத்தில் உறவினர்கள் ஒன்றுகூடும் விழா நடைபெறும். இவ்விழாவில் குடும்ப உறவுமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் சென்று கடலில் நீராடி மகிழ்வர்.

 

பங்குனி மாதத்தில் வெய்யில் ஆரம்பமாகும். இதனைக்  கோடைகாலத்தின் தொடக்க மாதம் என்றும் கூறலாம். தமிழ்நாட்டில் இம்மாதத்தில் வெய்யில் அதிகமாக இருப்பதால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்துள்ளார்கள். பெரியோர்களும் முதியோர்களும், சிறிய வர்களும் அவர்கள் பகுதியில் இருக்கும்  பெரிய மரங்களின் அடியில் அமர்ந்து பொழுதை நல்ல முறையில் கழிப்பார்கள். அவர்கள் நமது பண்பாட்டில் இடம்பெறும் ஆடுபுலி ஆட்டம், தாயம், பல்லாங்குழி, தட்டாங்கல், நொண்டி, கோலி போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு சிந்தனையை வளர்த்துக்கொள்வர்.

 

தயாரித்தவர் ஆசிரியர் சி. குருசாமி