Thursday, October 15, 2020

                                                       உடைந்த உள்ளம்

 

கோபால் தம்பதியரின் பிள்ளைகள் அமெரிக்காவில் பணிபுரிந்து வந்தனர். அந்த முதியவர்கள் மட்டும் சென்னையில் பல வசதிகள் உள்ள வீட்டில் குடியிருந்தனர்.

அவர்கள் தள்ளாத வயதிலும் எதையும் தள்ளாமல் வாழ்ந்து வந்தார்கள். தம்பதியினர் மிகவும் பிரியத்துடன் நாய் ஒன்றை வளர்த்து வந்தார்கள். அதுவே அவர்களின் உண்மையான நண்பன், உயிரைக் கொடுக்கும் காவலாளி. அதன் பெயர் வைரம். வைரம் என்றால் வலிமைதானே!.

வைரம் புலியின் தோற்றத்தையும் பசுவின் குணத்தையும் பெற்று இருந்தது. அதனால், கோபால் தம்பதியினர் அதன்மேல் உயிரையே வைத்திருந்தனர். தங்களைக் காக்கும் கடவுளாக அதனைப் போற்றிப் பாதுகாத்து வளர்த்து வந்தனர்.

  

கொவிட்-19 என்ற உயிர்க்கொல்லி நோய், முதியவர்களுக்குக்கூடக் கருணை காட்டவில்லை. கோபால் தம்பதியினர் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தம்மைத் தனிமைப் படுத்திக்கொண்டனர்.

தம்பதிகளுக்கு உடல் வலியோடு மன வலியும் ஏற்பட்டது. இப்பிறவிக்கு இத்துன்பம் போதும் என்று எண்ணும் அளவிற்கு அவர்கள் அந்நோயால் பெரும் துன்பம் அடைந்து வந்தார்கள்.

நாள்கள் பல வேகமாகச் சென்றன. மருந்து மாத்திரைகளைப் பார்த்ததும் வெறுக்கும் அளவிற்கு மனம் நொந்து போனார்கள். வந்த நோயும் முதியவர்களை விட்டுச் செல்வதாக இல்லை.

பாவம், அவர்களால்  இந்தத் தள்ளாத வயதில் என்னதான் செய்ய முடியும். மரணம் நெருங்கிவிட்டதாக நினைத்தார்கள். அவர்களின் கவலை வைரவனையே சுற்றிச் சுற்றி வந்தது. ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

தங்களுக்குப் பின் வைரம் பத்திரமாக இருப்பதற்கு அதனை ஒரு காப்பகத்தில் சேர்த்துவிடுவதற்கு முடிவு செய்தனர் அந்த முதியவர்கள். பத்தாண்டுகளுக்குரிய பணத்தையும் முன்கூட்டியே காப்பகத்திற்குச் செலுத்திவிட்டனர்.

காப்பக உரிமையாளர்  கண்ணும் கருத்துமாக வைரத்தைப்  பாதுகாப்பேன் என்று முதியவர்களிடம் உறுதி கூறினார்.

முதியவர்களுக்கு வந்தது பெருமூச்சு! காப்பக உரிமையாளர்  வைரத்தைக் காரில் ஏற்றியபோது அதன் கண்களில் கண்ணீர் மெல்லக் கசியத் தொடங்கியது.

வேதனைத் திரைக்கு எந்தனை நாள்களுக்கு வைரத்தால் அணை போடமுடியும். அதனைக் கண்ட முதியவர்களின் கண்கள் சாரை சாரையாகக் கண்ணீரை வடித்தன.  வேறு என்ன செய்வது. அவர்களால் ஒன்றும் செய்ய முடிவில்லை. நீண்ட நேரம் அமைதி மட்டும் உள்ளத்தில் நிலவியது.

வாரங்கள் சில சென்றன. முதியவர்களிடமிருந்து கொவிட்-19 விடைபெற்றுச் சென்றது. அப்பாட, வைரத்திற்காக அவர்கள் வணங்கும் இறைவன் உயிர்ப்பிச்சை அளித்துவிட்டான் என்று ஒருவர் மற்றவரிடம் சொல்லி ஆறுதல் அடைந்தனர். 

முதியவர்கள், வைரத்தைத் திரும்ப ஒப்படைக்கும்படிக் காப்பக உரிமையாளரிடம் தகவல் தெரிவித்தனர்.    

அதற்கு அவர், பெரியவுகத் தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் பிரிவுக்குப் பின்னர், மௌனம் சாதித்து வந்த  வைரம், மருந்து உட்கொள்ள மறுத்துவிட்டது. ஒரு நாள் திடீரென்று அதற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே அதன் உயிர் பிரிந்ததுஎன்று பதில் சொன்னார். நாள்கள் சில சென்றன. பெரிய அளவில் உருவாக்கப்பட்ட வைரத்தின் புகைப்படம் ஒன்று முதியவர்களின் வீட்டிற்கு வந்து சேர்ந்தது.  

 

(சொற்களின் எண்ணிக்கை 278)

எழுதியவர் ஆசிரியர் சி. குருசாமி

 

 

நீதிக்கருத்து

 

நம்மிடம் அடைக்கலம் புகுந்தவர்களை ஆயுள்முழுவதும் பாதுகாப்பது நம்முடைய கடமையாகும்.

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment