Thursday, October 15, 2020

 


தாயுள்ளம்

 

பெற்றோர் இல்லாத அருண், பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தான். வழக்கம்போல் ஒருநாள் அவன் அதிகாலையில் ஆற்றில் குளிக்கச் சென்றான். செல்லும் வழியில் காலில் ஏதோ தட்டுவதுபோல் அருணுக்குத் தெரிந்தது.

 

அருண்  மணலைக் கிளறிப் பார்த்தான். மணலுக்குக் கீழே ஒரு சிலை இருந்தது.

 

அந்தச் சிலை, ஒரு தாய் தன் குழந்தைக்கு உணவு ஊட்டுவதுபோல் இருந்தது. அருணுக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. சுமார் இருபது கிலோ எடை கொண்ட அந்தச் சிலையை அந்தவூர்த் தலைவரிடம் கொண்டுபோய் கொடுத்தான்.

 

ஊர்த் தலைவர் அருணின் நேர்மையைப் பாராட்டினார். அவனுக்குப் பரிசு ஒன்றும் கொடுத்தார். அதன்பின்னர், கருணைத் தாயைப் போல் காட்சியளிக்கும் அந்தச் சிலையை ஊரின் முக்கியத் தெருவில் உள்ள பெரிய ஆலமரத்தின் அடியில் வைப்பதற்கு ஏற்பாடு செய்தார்.  

 

ஊர் மக்கள், தாயின் அன்பை வெளிப்படுத்தும் அந்தச் சிலையை வணங்கத் தொடங்கினர். வருடங்கள் சில சென்றன. அந்த ஊரில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மழை பெய்யவில்லை.

 

ஆற்றில் நீர்வரத்து இல்லாமல் போனது. மக்கள் குடி நீருக்குக்கூடத் திண்டாடத் தொடங்கினர். ஊரில் வெப்பம் அதிகரித்துக்கொண்டே சென்றது. நோய்த் தொற்று ஏற்படத் தொடங்கியது.  அதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படியே மாதங்கள் சில சென்றன. மக்களின் உள்ளத்தில் வேதனைத்தீ எரியத்தொடங்கியது. அவர்களின் முகம் பனை மரத்தில் தொங்கும் தூக்கணாங்குருவியின் கூட்டைப் போல் காணப்பட்டது.   

 

மக்களில் ஒரு சிலர் தாயின் சிலையை ஊரின் முக்கியத்தெருவில் வைத்து வணங்கி வந்ததால்தான் அந்த ஊரில் நோய்கள் பெருகிவிட்டன என்று சொல்லத் தொடங்கினர். ஊர்த்தலைவரின் காதுக்கு அந்தச் செய்தி விரைவாகச் சென்றது.

 

உரக்கக் கத்திப் பேசும் ஒரு சிலரின் விருப்பப்படி அந்தச் சிலையை ஊருக்கு வெளியில் உள்ள குப்பைக் கிடங்கில் தூக்கிப் போடுவதற்கு முடிவு செய்தனர்.

 

இரண்டு பேர்,  அந்தச் சிலையைத் தூக்கும்போது அது கீழே விழுந்துவிட்டது. அது இரண்டு துண்டுகளாக உடைந்தது. அதனுள் இருந்த உலோகத் தகட்டில் குறிப்பு ஒன்று எழுதப்பட்டிருந்தது.

 

அந்தக் குறிப்பைக் கூட்டத்தில் இருந்த ஒருவர் வாசித்தார்.  அவர், நான் ஒரு விலை மதிப்பற்ற பொருள். இவ்வூரில் வாழும் என்னுடைய பிள்ளைகளுக்குப் பாதிப்பு ஏற்படும்போது என்னை உருக்கி விற்று விடுங்கள். அதன்மூலம் கிடைக்கும் பெரும் பணத்தைக் கொண்டு அதைச் சரி செய்துகொள்ளுங்கள்.  இது தாயுள்ளத்தின் அன்புப் பரிசு என்று வாசித்து முடித்தார். இதைக் கேட்ட ஊர்மக்கள் தலைகுனிந்து நின்றார்கள்.   

 

                                   (சொற்களின் எண்ணிக்கை 214)

எழுதியவர் ஆசிரியர் சி. குருசாமி

 

நீதிக்கருத்து:

 

சிந்தனை செய்யாமல் அவசரப்பட்டு எந்தவொரு முடிவும் எடுக்கக் கூடாது.


No comments:

Post a Comment