Thursday, October 15, 2020

 

 நன்றி சொல்ல...

 

 

ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு பெரிய மாமரம் இருந்தது. அந்த மரத்தில் இரண்டு   புறாக்கள் வசித்து வந்தன. நீண்ட நாள்களுக்குப் பிறகு அந்த ஊரில் மழை பெய்தது.  மரத்தில் தங்கியிருந்த அந்தப் புறாக்கள் மழையில் நனைந்தன. அப்போதுதான் அவை பாதுகாப்பாகத் தங்கும் இடத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கின.

 

புறாக்கள் சிறு சிறு குச்சிகள், வைக்கோல் துண்டுகள் போன்றவற்றைச் சேகரித்து வந்தன. அவற்றைக் கொண்டு அந்த மாமரத்தில் அப்புறாக்கள் கூடு ஒன்று கட்டிமுடித்தன. அது அவற்றிற்கு மிகவும் உதவியாக இருந்தது.    

 

மாதங்கள் சில உருண்டோடிச் சென்றன. புறாக்களில் ஒன்று இரண்டு முட்டைகள் இட்டது. அதைப் பக்கத்து மரத்தில் வசித்து வந்த குயில் ஒன்று பார்த்துவிட்டது. ஒருநாள் குயில் புறாக்கள் இல்லாத நேரத்தில் முட்டைகளைத் தூக்கிச் சென்றது.

 

சிறிது நேரத்தில் இரண்டு முட்டைகளுக்குப் பதில் தம்மிடம் இருந்த இரண்டு முட்டைகளைக் கொண்டு வந்து புறாக்களின் கூட்டில் அது வைத்தது. புறாக்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாது. புறாக்கள் முட்டைகளை அடைகாத்து வந்தன.

 

நாள்கள் சில சென்றன. ஒரு முட்டையிலிருந்து மட்டும் குயில் குஞ்சு ஒன்று வெளியில் வந்தது. அது புறாக்களின் குஞ்சு இல்லை என்று அவற்றிற்குத் தெரிந்தது. இருந்தாலும் குயில் குஞ்சைப் பத்திரமாகப் பாதுகாத்து வளர்த்து வந்தன.

 

புறாக்கள் அந்தக் குயிலின் குஞ்சுக்கு வாழும் முறையை மெல்ல மெல்லக் கற்றுக்கொடுத்தன. குயிலின் குஞ்சு மிகவும் சுறு சுறுப்பாக இயங்கி வந்தது.

 

ஆண்டுகள் சில சென்றன. புறாக்களுக்கு வயதாகிவிட்டது. அவற்றால் பறக்க முடியவில்லை. இதனை நன்கு உணர்ந்த இளம் குயில், நாள்தோறும் புறாக்களுக்குத்  தேவையான உணவைக் கொண்டுவந்து கொடுத்தது.

 

திடீரென்று ஒரு நாள் வயது முதிர்ந்த குயில் ஒன்று அந்த மரத்திற்குப் பறந்து வந்தது. அது இளம் குயிலிடம் அதன் வரலாற்றைப் பற்றி எடுத்துக் கூறியது. அதோடு தம் இனத்துடன் வந்து சேருமாறு அது அறிவுரையும் கூறியது. இதனைக் கேட்டவுடன் இளம் குயில் அதிர்ச்சி அடைந்தது. அது வயது முதிர்ந்த குயிலுடன் செல்ல மறுத்தது.  

 

வயது முதிர்ந்த குயிலைப் பார்த்து இளம் குயில், என் வாழ்நாள் முழுவதும் வயதாகிவிட்ட என்னுடைய பெற்றோரைப் பாதுகாப்பது என் கடமை, அவர்கள் என்னோடுதான் இருக்கிறார்கள். நீ தயவுசெய்து நீ பறந்து போகலாம் என்று கூறியது. இதனைக் கேட்டதும் பெரிய குயில் அதிர்ச்சியடைந்தது. அருகில் இருந்த புறாக்களின் கண்களில் நீர் மெல்லக் கசிந்தது.    

 

(சொற்களின் எண்ணிக்கை 240)

எழுதியவர் ஆசிரியர் சி. குருசாமி

 

கதையின் நீதி

 

செய்த நன்றியை என்றும் மறக்கக் கூடாது. மற்றவர்கள் நமக்குச் செய்த உதவியை என்றும் மறக்கக் கூடாது.

 

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

No comments:

Post a Comment