சிதறிய எண்ணம்
கவிதாவின் பெற்றோர் அடுக்குமாடி வீட்டில் குடியிருந்து
வந்தனர். அவர்களின் வீட்டில் ஐந்து அறைகள் இருந்தன. கவிதாவுக்குச் செல்லப்
பிராணிகள் என்றால் உயிர். அதனால், பெற்றோரிடம்
சொல்லி ஒரு நாய்க்குட்டி வாங்கி வளர்க்க வேண்டும் என்று அவள் நினைத்தாள்.
கவிதாவின் பெற்றோர், நாய்க்குட்டி வளர்ப்பதில் உள்ள
சிரமத்தைக் கவிதாவிடம் கூறினர். அவள் அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக்
கேட்கவில்லை. தொடர்ந்து அடம் பிடித்து வந்தாள். முகத்தையும் சில நாள்கள் தூக்கி
வைத்துக்கொண்டாள். அதனால், பெற்றோரும் மகளின் பிடிவாதத்தை நினைத்து மிகவும்
வருந்தினர்.
இறுதியில் கவிதாவின் பெற்றோர், கவிதாவுக்கு விலை உயர்ந்த
நாய்க்குட்டி ஒன்றை வாங்கிக் கொடுத்தார்கள். அதனால், அதனைக்
கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது கவிதாவின் முக்கிய வேலையாக
மாறிவிட்டது.
பள்ளியில் ஆசிரியர் பாடங்களை நடத்தும்போதெல்லாம் கவிதா
தன்னுடைய நாய்க்குட்டியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பாள். பள்ளியிலிருந்து
வீட்டிற்குத் திரும்பியதும் நாய்க்குட்டியுடன் கொஞ்சிக் கொஞ்சி விளையாடி
மகிழ்வாள்.
நாள்கள் செல்லச் செல்லக் கவிதாவுக்குப் படிப்பில் கவனம்
குறைந்தது. ஆசிரியர் நடத்தும் பாடங்களையும் அக்கறையுடன் அவள் கவனிப்பதில்லை. கவிதாவுக்குக்
கவனச் சிதைவு ஏற்படத்தொடங்கியது; மனம் அலை
பாய்ந்தது.
இதனால், கவிதாவின்
மதிப்பெண்கள் குறையத்தொடங்கின. கவிதா அதனைப் பெரிதுபடுத்தவில்லை. பள்ளிப்
படிப்பில் முதல் நிலையில் இருந்த கவிதா பத்தாவது நிலைக்குச் சென்றாள்.
பள்ளி ஆசிரியர் கவிதாவின் பெற்றோரை அழைத்துப் பேசினார்.
அப்போது கவிதாவும் இருந்தாள். ஆசிரியர், கவிதாவின் நிலையை அவர்களிடம் விளக்கிச்
சொன்னார். பெற்றோரும் கவிதா வீட்டில் நடந்துகொள்ளும் முறையை ஆசிரியரிடம் திறந்த
மனத்துடன் சொன்னார்கள்.
ஆசிரியருக்குக் கவிதாவின் பெற்றோரின் அணுகுமுறை மிகவும்
பிடித்துவிட்டது. அதனால், கவிதாவின்
எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு ஆசிரியர் நான்கு வழித் திட்டம் ஒன்றை வகுத்துக்
கொடுத்தார்.
கவிதாவுக்கு இருக்கும் நேரத்தைக் குடும்பம், கல்வி,
பொழுதுபோக்கு, ஓய்வு ஆகியவற்றுக்கு முறையாகப் பயன்படுத்தும்படி
அவர்களிடம் ஆசிரியர் சொன்னார். கவிதாவும் முழு ஒத்துழைப்புத் தருவதாக அவர்களிடம்
உறுதி கூறினாள்.
கவிதா, பள்ளியில் நடைபெற்ற மூன்றாவது தேர்வில் மீண்டும்
முதலிடத்தைப் பெற்றாள். பெற்றோரும் ஆசிரியரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் கவிதாவைப்
பாராட்டிப் பரிசு அளித்தனர்.
(சொற்களின் எண்ணிக்கை 209)
எழுதியவர் ஆசிரியர் சி. குருசாமி
நீதிக்கருத்து
வழிகாட்டிகளின்
கருத்தைப் பின்பற்றினால் வாழ்க்கையில் சிறப்படையலாம்.
No comments:
Post a Comment