Thursday, October 15, 2020

 


 கிளியும் காட்டுப் பூனையும்

 

ஓர் ஊரில் பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. அந்த ஆலமரத்தில் கிளிகள் ஏராளம் வசித்து வந்தன. ஒரு கிளி மட்டும் உருவத்தில் பெரியதாக இருந்தது. அதன் அலகுகூட மிகவும் நீளமாக இருந்தது.

பெரிய கிளி ஒரு நாள் இரவுப் பொழுதில் வயிற்று வலியால் உரக்கக் கத்தியது. அதன் குரலைக் கேட்டதும் மற்றக் கிளிகள் பயப்படத்தொடங்கின. அவற்றைப் பார்த்துப் பெரிய கிளி தமக்கு எல்லாக் கிளிகளும் பயப்படத்தொடங்கிவிட்டன. இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், அப்போதுதான் தான் நினைத்ததைச் சாதிக்கலாம்  என்று நினைத்தது.

அதனால் பெரிய கிளி,  அதனைக் கிளிகளின் ராணி என்று அறிவித்தது. மற்றக் கிளிகளும் பயத்தில் பெரிய கிளி சொல்லியதை ஏற்றுக்கொண்டன.   

உடனே பெரிய கிளி, மற்றக் கிளிகளைப் பார்த்து, ஒவ்வொரு நாளும் நான் கேட்கும் உணவைத் தேடிக்கண்டுபிடித்து எனக்குத் தரவேண்டும்என்று உத்தரவிட்டது.

பெரிய கிளி சொல்லியதை எல்லாம் ஆலமரத்தில் வசித்து வந்த மற்றக் கிளிகள் கேட்டுவந்தன. அதன் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து நடந்துவந்தன.   

உழைப்பில்லாமல் உண்டு கொழுத்துவந்த பெரிய கிளி, தலைக்கனத்துடன் திரிய ஆரம்பித்தது.

ஒருநாள் இரவு காட்டுப்பூனை ஒன்று இரைதேடி ஆலமரத்திற்கு வந்தது. அப்போது பெரிய கிளி வழக்கம்போல் மற்றக் கிளிகளைப் பயமுறுத்துவதற்காகக் குரலை உயர்த்திக் கத்தியது.

அதனைக் கேட்ட எல்லாக் கிளிகளும் பயத்தில் நடுங்கின, பின்னர் அவை கண்ணைமூடிச் சத்தம் இல்லாமல் இருந்ததால் தூங்க ஆரம்பித்தன.   

இவற்றை எல்லாம் ஆலமரத்திற்கு இரை தேடிவந்த காட்டுப்பூனை ஒன்று கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது. அது பெரிய கிளி இருக்கும் இடத்திற்கு அமைதியாகச் சென்றது. பெரிய கிளியின் கழுத்தைக் கௌவிப்பிடித்துக் கொன்று தின்றது.  

மறுநாள் காலை மரத்தில் இருந்த கிளிகள் பெரிய கிளிக்குப் பிடித்த உணவைக்  கொண்டு வந்தன. அதன் இறகுகள் மட்டும் அங்கும் இங்கும் சிதறிக்கிடந்தன.    

 

(சொற்களின் எண்ணிக்கை 183)

எழுதியவர் ஆசிரியர் சி. குருசாமி

நீதிக்கருத்து:  

மற்றவர்களின் மனத்தைத் துன்புறுத்தும் எண்ணத்தை ஒருபோதும் வளர்த்துக்கொள்ளக் கூடாது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 


No comments:

Post a Comment