கருணை உள்ளம் -
சிறுகதையைப் படித்துப் புரிந்துகொள்ளவும். போலச்செய்தல் என்ற விதிமுறைக்கு ஏற்ப மற்றொரு சிறுகதையை எழுதுவதற்கு முயற்சி செய்யவும். நன்றி
முகுந்தனுக்கு எண்பது வயது இருக்கும். அவர் எப்போதும்
சுறுசுறுப்புடன் இருப்பார். தம்மால் முடிந்த வேலைகளை அவருடைய வீட்டிற்குச் செய்து
வந்தார். கோவிட்-19-இன் தாக்கம் இருக்கும் இந்தக் காலக் கட்டத்தில்கூட வீட்டிற்கு வேண்டிய சில பொருள்களைக் கடைகளில்
வாங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
வீட்டில் உள்ளவர்கள் தடுத்தால்கூட, முகுந்தன் வெளியில்
சென்று வீட்டிற்கு வேண்டியவற்றை வாங்கி வருவார். அவர் ஒரு நாள் வழக்கம்போல் ஒரு கடையில்
காய்கறிகளை வாங்கினார். அவற்றைப் பேருந்து நிற்கும் இடத்திற்குக் கொண்டுசென்றார். அங்கு
அவர் பேருந்துக்கு நீண்ட நேரம் காத்திருந்தார்.
முகுந்தன் செல்ல வேண்டிய பேருந்து வந்தது. ஏறுவதற்குக் கூட்டம்
அதிகமாக இருந்தது. அதனால், அவர்
ஓரமாகக் காத்துக்கொண்டிருந்தார். எல்லோரும் பேருந்தில் ஏறிவிட்டனர்.
இறுதியாக முகுந்தன் பேருந்தின் படிக்கட்டில் கால் வைக்கும்போது
வழுக்கிக் கீழே விழுந்துவிட்டார். முகுந்தனின் நெற்றியில் காயம் ஏற்பட்டு, இரத்தம்
வடிந்துகொண்டிருந்தது. முகுந்தனால் இரத்தம் வடிவதை உணர முடியவில்லை.
முகுந்தன் வேகமாக எழுந்து பேருந்துக்குள் சென்றுவிட்டார். அங்கு இருந்தவர்களில்
ஒரு சிலர் அவரைப் புகைப்படம் எடுத்தனர். பலர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த பெண்மணி ஒருவர்
வேகமாக எழுந்தார். அவர் முகுந்தனின் அருகில் விரைவாகச் சென்றார்.
அந்தப் பெண்மணி முகுந்தனிடம் எதையோ பேசிவிட்டு, தன்னிடம்
இருந்த டிசுத்தாளை வைத்து இரத்தம் வடிவதை நிறுத்தினார்.
இந்தக் காட்சியையும் சிலர் படம்பிடித்தனர். இவற்றை எல்லாம்
கவனித்துக்கொண்டிருந்த மாணவி ஒருத்தி, முகுந்தனைத் தன்னுடைய இருக்கையில்
அமரும்படிச் சொன்னார். முகுந்தன் அவர்களைக் கருணை உள்ளத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்.
(சொற்களின் எண்ணிக்கை 154)
எழுதியவர் ஆசிரியர் சி. குருசாமி
நீதிக்கருத்து
கருணை
உள்ளத்தோடு உதவி செய்யும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment