Wednesday, July 1, 2009

இலக்கியம் - சிலப்பதிகாரம் அறிமுகம்

இலக்கியம் - சிலப்பதிகாரம் அறிமுகம்


சிலப்பதிகாரத்தை எழுதியவர் இளங்கோவடிகள். இது தமிழில் உள்ள காப்பியங்களுள் (தொடர்நிலைச் செய்யுள்) மிகவும் பழமையானது. ஒருகாலத்தில் புலவர்கள் மன்னர்களைப் பற்றியும் இறைவனைப் பற்றியும்தாம் இலக்கியங்களைப் படைத்தனர். அக்காலத்தில் மக்களின் வாழ்க்கை முறையை மையமாக வைத்து எழுதப்பட்டதுதான் சிலப்பதிகாரம். அதனால், இதனைக் குடி மக்கள் காப்பியம் என்றும் நாடகக் காப்பியம் என்றும் அழைப்பர்.

சங்ககாலத்தில் தமிழ்நாடு மூன்று பெரும்பிரிவுகளாக இருந்தது. அம்மூன்று பிரிவையும் சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என்று அழைத்தனர். இதனை முப்பெரும் மன்னர்கள் ஆண்டு வந்தனர். இம்முப்பெரும் மன்னர்களின் சிறப்பையும் மக்களின் வாழ்க்கை முறையையும் பற்றி ஆசிரியர் விளக்குகிறார்.

இளங்கோவடிகள் இயற்கை வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்துக் காப்பியத்தைத் தொடங்குகிறார். இது மூன்று காண்டங்களை உடையது. இக்காண்டங்களை முப்பது உட்பிரிவுகளாகப் பிரித்துள்ளார். காப்பியத்தின் தொடக்கம் புகார்க்காண்டம்.
புகார்க்காண்டம் சோழமன்னன் சிறப்புகளையும் அங்கு வாழ்ந்த மக்களின் பண்பு நலன்களையும் கொண்டு அமைந்துள்ளது. இரண்டாவது காண்டம் மதுரைக் காண்டம் இது பாண்டிய மன்னனின் வாழ்க்கை முறையையும் அவனின் அவசரக்குணத்தையும் மக்களின் வாழ்க்கை முறையையும் எடுத்துக் கூறுகிறது. மூன்றாவது காண்டம் வஞ்சிக் காண்டம். இக்காண்டத்தில் இன்று கேரளா என்று அழைக்கப்படும் சேர மன்னனின் குண இயல்புகளையும் அவனின் வீரச் சிறப்புகளையும் விளக்கிக் கூறுகிறது.






No comments:

Post a Comment