Wednesday, May 21, 2014

வணங்கிடுவோம்

பிறந்த பொன்னாடும்                         
     பேணிவளர்த்த நன்னாடும்
இருகண்ணென நினைத்து
     போற்றிடுவோம் என்னாளும்
உலகம் உயர்ந்திட
     உண்மையாய் உழைத்திடும்
உத்தமர்தமை உறுதியோடு
     உள்ளத்தால் வணங்கிடுவோம்!

வயதில் மூத்தோரை
     வாழ்வில் சிறந்தோரை
உள்ளத்தால் உண்மைபேசி
     உயர்ந்து நிற்போரை
இல்லையென்று சொல்லாமல்
    இயன்றவரை கொடுப்போரை
என்றென்றும் உளமார
    வணங்கி நிற்போம்!

பேணிவளர்த்த பெற்றோரை                          
    பெருநிலை கண்டபோதும்
பேருவகை அடைந்திடும்
    பெருமைமிகு ஆசானை
அன்புடன் வணங்கிடுவோம்!
    வாழ்வுதனை வளமாக்கிட்ட
வனப்புமிகு இன்தமிழை                          
    இருகைகூப்பி வணங்கிடுவோம்!

           சி. குருசாமி

No comments:

Post a Comment