Friday, June 6, 2025

 

சின்ன சின்ன


சின்ன சின்னக்கிளி-அது

சிங்காரக் கிளி! 

வண்ண வண்ணக் கிளி

அது வண்ணம் நிறைந்த கிளி

சொன்ன பேச்சைக் கேட்குமே

சொன்னதையும் சொல்லுமே!!


கொத்திக்கொத்தித் தின்னுதே

கூட்டமாய் நின்று பேசுதே

கொடுத்துக் கொடுத்துத் தின்னுதே

கொஞ்சிக் கொஞ்சி பேசுதே!!


சின்னச் சின்னக் கிளி

அது சிங்காரக் கிளி!

கோபம் கொண்டு விழிக்கிதே

கொத்திக்கொஞ்சம் பார்க்குதே

அக்கம் பக்கம் போனாலது  

விரட்டி நம்மை ஒதுக்குமே!


சின்னச் சின்னக் கிளி

அதுசிங்காரக்கிளி!

பசுமை தழைக்க உதவுதே

பலமையில் தூரம் பறக்குதே

நல்விதையை அங்கு தூவுதே

மரமும் செடியும் வளருதே

மழையை அதுகொடுக்குதே

உலகம் செழித்துவளருதே

உயரநமக்கு உதவுதே!

 

சின்னச்சின்னக் கிளி

அது சிங்காரக்கிளி!!

-சிகு




 

வற்றாத பண்பு


வற்றாத பண்பு நமக்கு என்றும் வேண்டும்

வளமான வாழ்வினைப் பெற்றிடவேண்டும்

வாழும்முறையினை அறிந்திடவேண்டும்

வயதானபின்னருமது தொடர்ந்திடவேண்டும்!


நெஞ்சம் நல்லுணர்வினைப் பெற்றிடவேண்டும்

நெஞ்சாரப் பிறரை மதித்திடவேண்டும்

பெற்றோரைத் தெய்வமாய்ப் போற்றிடவேண்டும்

மற்றோரை அதுபோல மதித்திட வேண்டும்!!

- கவிமொழி -சிகு

 

பக்குவம் பெற்றிட


வெற்றிமீது வெற்றி விரைந்து வந்திடினும்

வீரர்களை ஏற்றிடும் விழாமனம் வேண்டும்

தம்மிடம் இருப்போரைத் தழுவிச் செல்லும் 

தரமிகுந்த உள்ளம் தரணியில் வேண்டும்!


எத்தனை சிறப்புகள் இப்புவியில் பெற்றிடினும்

மாறா மனிதநேயம்  இருந்திட வேண்டும்

பணிபல முடித்திடினும் பார்போற்றும் நிலைவந்திடினும்

பதமுணர்த்தும் பக்குவமான சோறாகிட வேண்டும்!


உத்தமராய் இவ்வுலகில் வாழுமெண்ணம்  வேண்டும்

தத்துவம் அறிந்திடினும் மனத்தத்துவம் உணர்ந்திடவேண்டும்

உண்மையாய் வாழ்ந்திடவே உயர்ந்தகொள்கைதனை

உள்ளத்தில் வகுத்தொளிவின்றி உயர்ந்து நின்றிடவேண்டும்!. 

- கவிமொழி - சி.கு


Sunday, April 20, 2025

 பார் போற்றும்  நற்குணம்


பகையில்லா நல்லுலகம் என்றும் வேண்டும்

பகுப்பில்லா உள்ளம் நமக்கு வேண்டும்

பார்போற்றும் நற்குணம் சிறக்க வேண்டும்

பரந்துபட்ட சிந்தனை வளர வேண்டும்!


சங்கக் கவிஞரின் கனவு மெய்ப்பட வேண்டும்

சங்கமிக்கும் நல்லுள்ளம் நிலைக்க வேண்டும்

பூனையும் கிளியும் சேர்ந்து வாழ்ந்திட வேண்டும்

புவியில் ஒற்றுமை நிலைத்திட வேண்டும்!


கார்போன்ற நற்கொடை நெஞ்சம் வேண்டும்

காட்டாறு போலது விரிந்திட வேண்டும்

கல்வியில் இவ்வுலகம் சிறந்திட வேண்டும்

கல்லாமை இல்லாமை ஆகிட வேண்டும்!

- சிகுரு

 


கசக்கிப் பிழிந்த வேடன்


சோவென்று பொழிந்தது மழை

சொர்க்கமாக நினைத்தது வயல்

சொல்லிப் பூத்தன பூக்கள்

சொல்லாமல் சென்றன ஈக்கள்!


கொண்டு சென்றன தேனை

குடித்து மிதந்தன காற்றினில்

கூட்டை அடைந்தன ஈக்கள்

கொட்ட மறந்து தூங்கின!


காட்டில் வாழ்ந்த மனிதனோ

கண்ணில் பட்ட தேனடையை

கசக்கிப் பிழிந்தான் கருவுடனே

கதறித் துடித்தன ஈக்கள்!


என்ன மகிழ்ச்சி மனத்தில்

துள்ளிக் குதித்தான் வேடன்

கொண்டு கொடுத்தான் பண்ணையில்

கூலி கொடுத்தார் பண்ணையாரே!


இனிப்பாய் நினைத்தான் வேடன் 

இதயம் பிழிந்ததை மறந்தான்

உள்ளம் துடித்த ஈக்களோ 

உலகை மறந்தன அப்பொழுதே!

------சிகுரு


Friday, January 10, 2025

 11.01.2025

சிறுகதை 


நினைவு 

இரவு ஏழு மணி. இருள் சூழ்ந்துவிட்டது. வானம் மப்பும் மந்தாரமாக இருந்து. இப்பப் பொழிவோம் பிறகு பொழிவோம் என்று தக்கத் தருணத்திற்குக் காத்துக்கொண்டிருந்தது மழை. அந்நேரத்தில் நிலவின் முகம் தென்படத்தொடங்கியது. அந்த இருட்டில் கல்தரையில் காலடி எடுத்துவைக்கும் சத்தம் மெல்ல வந்தது. யோரே இருட்டில் வருகிறார்கள் அம்மா என்று வேணி கூறினாள். யாரும் வரவில்லை அது உன்னுடைய பிரமை பேசாமல் வா என்று அம்மா மேகலை கூறினார். அவரின் குரல் சற்று அதட்டலுடன் தூக்கி இருந்தது. மனத்தில் வேகம் பிறந்தது.

 

பள்ளியில் இருந்து அம்மாவுடன் திரும்பி வந்துகொண்டிருந்த வேணி அம்மா சொல்லியதைக் கேட்டதும் வாடத்தொடங்கினாள். அந்த நேரத்தில் மீண்டும் அதே காலடிச் சத்தம். இப்பொழுது வேணியின் தாயாருக்குச் சற்றுப் பயம் ஏற்பட்டது. நெஞ்சு படபடவென மெல்ல மெல்ல அடிக்கத் தொடங்கியது. திரும்பிப் பார்க்காமல் அமைதியாக நடந்தார். ஆனால், காலடிச் சத்தம் அவர்கள் இருவரையும் பின்தொடர்ந்து வந்தது. சுமார் ஐம்பது அடி தூரம் அவர்கள் வேகமாக நடந்து சென்றபின், சத்தம் நின்றது. என்னதான் நடந்து வருகிறது என்ற அச்சத்துடன்  மேகலை திரும்பிப் பார்த்தாள். அப்பொழுது அவள் கண்ட காட்சி நெஞ்சை உலுக்கியது. பெரியவர் ஒருவர் பாதையின் ஓரத்தில் இருக்கும் சிறிய சுவரில் அமர்ந்து தரையில் உணவுப்பொட்டலத்தை விரித்து வைத்திருந்தார்,

 

கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு பூனை அங்கு வந்தது. அது பெரியதாக இருந்தது. சாம்பல் நிறத்தில் காட்சி தந்தது. மெல்லத் தரையில் விரித்திருந்த உணவுப்பொட்டலத்துக்கருகில் சென்றது. மெல்லிய குரல் எழுப்பியது. மூன்று குட்டிகளும் அங்கு வேகமாக ஓடி வந்தன. எல்லாம் பகிர்ந்து உண்டன. வயிறு நிரம்பியது. வாழும் இடத்தை நினைத்தன. முதலில் குட்டிகள் அருகில் இருந்த அடர்ந்த செடிகளுக்கிடையே சென்றன. அப்போது மெல்லிய ஒலி வந்தது. தாய்ப்பூனை தட்டுத் தடுமாறி விழுந்து எழுந்து  அந்தப் பாதையின் வழியே புதரை நோக்கிச் சென்றது. இதனை அன்போடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்.

 

அந்த முதியவரை அச்சமின்றி அருகில் வந்து உற்றுக் கவனித்தனர் தாயும் மகளும். மேகலையின் கண்களிலிருந்து கண்ணீர் மெல்லக் கசிந்தது. வாணிக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் சிறிய பிள்ளைதானே!. மேகலையைக் கவனித்த அந்த  முதியவர் அவளுக்கு ஆறுதல் கூறிச்சென்றார். அவர் அங்கிருந்து மறையும்வரை தாயும் மகளும் மாறுபட்ட பார்வையில் அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர்.  

சிகுரு