Friday, January 10, 2025

 11.01.2025

சிறுகதை 


நினைவு 

இரவு ஏழு மணி. இருள் சூழ்ந்துவிட்டது. வானம் மப்பும் மந்தாரமாக இருந்து. இப்பப் பொழிவோம் பிறகு பொழிவோம் என்று தக்கத் தருணத்திற்குக் காத்துக்கொண்டிருந்தது மழை. அந்நேரத்தில் நிலவின் முகம் தென்படத்தொடங்கியது. அந்த இருட்டில் கல்தரையில் காலடி எடுத்துவைக்கும் சத்தம் மெல்ல வந்தது. யோரே இருட்டில் வருகிறார்கள் அம்மா என்று வேணி கூறினாள். யாரும் வரவில்லை அது உன்னுடைய பிரமை பேசாமல் வா என்று அம்மா மேகலை கூறினார். அவரின் குரல் சற்று அதட்டலுடன் தூக்கி இருந்தது. மனத்தில் வேகம் பிறந்தது.

 

பள்ளியில் இருந்து அம்மாவுடன் திரும்பி வந்துகொண்டிருந்த வேணி அம்மா சொல்லியதைக் கேட்டதும் வாடத்தொடங்கினாள். அந்த நேரத்தில் மீண்டும் அதே காலடிச் சத்தம். இப்பொழுது வேணியின் தாயாருக்குச் சற்றுப் பயம் ஏற்பட்டது. நெஞ்சு படபடவென மெல்ல மெல்ல அடிக்கத் தொடங்கியது. திரும்பிப் பார்க்காமல் அமைதியாக நடந்தார். ஆனால், காலடிச் சத்தம் அவர்கள் இருவரையும் பின்தொடர்ந்து வந்தது. சுமார் ஐம்பது அடி தூரம் அவர்கள் வேகமாக நடந்து சென்றபின், சத்தம் நின்றது. என்னதான் நடந்து வருகிறது என்ற அச்சத்துடன்  மேகலை திரும்பிப் பார்த்தாள். அப்பொழுது அவள் கண்ட காட்சி நெஞ்சை உலுக்கியது. பெரியவர் ஒருவர் பாதையின் ஓரத்தில் இருக்கும் சிறிய சுவரில் அமர்ந்து தரையில் உணவுப்பொட்டலத்தை விரித்து வைத்திருந்தார்,

 

கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு பூனை அங்கு வந்தது. அது பெரியதாக இருந்தது. சாம்பல் நிறத்தில் காட்சி தந்தது. மெல்லத் தரையில் விரித்திருந்த உணவுப்பொட்டலத்துக்கருகில் சென்றது. மெல்லிய குரல் எழுப்பியது. மூன்று குட்டிகளும் அங்கு வேகமாக ஓடி வந்தன. எல்லாம் பகிர்ந்து உண்டன. வயிறு நிரம்பியது. வாழும் இடத்தை நினைத்தன. முதலில் குட்டிகள் அருகில் இருந்த அடர்ந்த செடிகளுக்கிடையே சென்றன. அப்போது மெல்லிய ஒலி வந்தது. தாய்ப்பூனை தட்டுத் தடுமாறி விழுந்து எழுந்து  அந்தப் பாதையின் வழியே புதரை நோக்கிச் சென்றது. இதனை அன்போடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்.

 

அந்த முதியவரை அச்சமின்றி அருகில் வந்து உற்றுக் கவனித்தனர் தாயும் மகளும். மேகலையின் கண்களிலிருந்து கண்ணீர் மெல்லக் கசிந்தது. வாணிக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் சிறிய பிள்ளைதானே!. மேகலையைக் கவனித்த அந்த  முதியவர் அவளுக்கு ஆறுதல் கூறிச்சென்றார். அவர் அங்கிருந்து மறையும்வரை தாயும் மகளும் மாறுபட்ட பார்வையில் அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர்.  

சிகுரு


No comments:

Post a Comment