Sunday, October 24, 2010

பயிற்சி 36
கவிதையின் கருத்தும் நயமும் இங்கே இடம்பெற்றுள்ளன. அவற்றைப் படித்த பின்னர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை எழுதவும்


கவிதை 2. - உடல் நலம் பேணல் –


உடலின் உறுதி உடையவரே
உலகின் இன்பம் உடையவராம்;
இடமும் பொருளும் நோயாளிக்கு
இனிய வாழ்வு தந்திடுமோ?

சுத்தமுள்ள இடமெங்கும்
சுகமும் உண்டு; நீ அதனை
நித்தம் நித்தம் பேணுவையேல்,
நீண்ட ஆயுள் பெறுவாயே.

காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத்தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவானே!

ஆளும் அரசன் ஆனாலும்
ஆகும் வேலை செய்வானேல்,
நாளும் நாளும் பண்டிதர் கை
நாடி பார்க்க வேண்டாமே.

கூழை யேநீ குடித்தாலும்
குளித்த பிறகு குடி, அப்பா !
ஏழையே நீ ஆனாலும்
இரவில் நன்றாய் உறங்கப்பா !

மட்டுக் குணவை உண்ணாமல்
வாரி வாரித் தின்பாயேல்,
திட்டு முட்டுப் பட்டிடுவாய்;
தினமும் பாயில் விழுந்திடுவாய்.

தூய காற்றும் நன்னீரும்
சுண்டப் பசித்த பின்உணவும்
நோயை ஓட்டி விடும், அப்பா !
நூறு வயதும் தரும், அப்பா !

அருமை உடலின் நலமெல்லாம்
அடையும் வழிகள் அறிவாயே;
வருமுன் நோயைக் காப்பாயே !
வையம் புகழ வாழ்வாயே
.

- கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை


கவிதையின் கருப்பொருள்

உடலின் முக்கியத்துவத்தையும் அந்த உடலைப் பேணிக்காப்பதற்கு என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் அதனால் ஏற்படும் நன்மைகள் எவை என்பதையும் கருவாகக் கொண்டதே இக்கவிதை.

கருத்து

நல்ல உறுதியான உடலை உடையவர்கள் மட்டும் உலகின் இன்பம் உடையவராக இருப்பர். அவர்களிடமிருக்கின்ற இடமும் பொருளும் அவர்களுக்கு இன்பமான வாழ்வைத்தரா.

சுத்தமுள்ள இடத்தில் சுகம் நிறைந்திருக்கும். அதனைக் காக்கும்போது நீ நீண்டகாலம் உயிர் வாழலாம்.

காலையிலும் மாலையிலும் உலவிக் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டு எமன் வணங்கிச் செல்வான்.

நாட்டை ஆளுகின்ற அரசன் தன்னால் முடிந்த வேலையைச் செய்துவந்தால் வைத்தியர் அவனுடைய கையைப்பிடித்து உடல்நலம் குறித்து நாடித்துடிப்பைப் பார்க்கவேண்டாம் என்று கூறுகிறார்.

அப்பா! கூழாக இருந்தாலும் அதனைக் குளித்த பின்புதான் நீ குடிக்கவேண்டும். ஏழையாக இருந்தாலும் நீ இரவில் நன்றாகத் தூங்கவேண்டும்.

நீ அளவோடு உண்ணாமல் அதிகமாகத் தின்னும்போது திட்டுமுட்டு அடித்துவிடும். அதனால் நீ நோயாளியாக மாறிவிடும் சூழல் ஏற்படும்.

அப்பா! சுத்தம் நிறைந்த காற்று, தூய்மையான தண்ணீர், பசித்த பின்னர் உண்ணும் வழக்கம் ஆகியவை நோயைப் போக்கி நூறு ஆண்டு காலம் வாழ்ந்திட உதவும்.

நீ உடல் நலத்துடன் வாழும் வழிமுறைகளை அறிந்துகொள்ளும்போது நோய் வரும்முன்பு அந்த நோயைத் தடுத்திடலாம். அதன்மூலம் நீ இவ்வுலகம் புகழ வாழ்ந்திடலாம்.



பொருள்நயம்

`உடல் நலம் பேணல்` என்ற தலைப்பில் அமைந்துள்ள இக்கவிதை மக்களை எளிதில் கவரும் பாங்கில் மிகவும் எளிய சொற்களைக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. இவ்வுலகில் இன்பம் ஏராளமாக இருக்கிறது. இந்த இன்பத்தை முழுவதும் தூய்க்கவேண்டுமானால் நோய் இல்லாமல் நல்ல உறுதியுள்ள உடலுடன் இருக்கவேண்டும் என்று கூறுகிறார். பொதுவாக வசதியாக வாழ்வதற்கு இடமும் பொருளும் அவசியம் என்பதைக் கவிமணி விளக்க வந்தாலும் அவற்றைப் பயன்படுத்துவதற்கு உடல் உறுதியாக இருக்க வேண்டும் என்று தான் சொல்ல வந்த கருத்தை மீண்டும் வலுவாக்குகிறார். இங்குத் தொடக்கத்தில் தான் என்ன சொல்லப் போகிறேன் என்பதைச் சுருக்கமாகக் கவிமணி கூறுகிறார்.

சுத்தமுள்ள இடத்தில்தான் ஒருவர் சுகமாக வாழமுடியும், சுகமாக வாழ்வதற்கு நீ நாள்தோறும் சுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுகிறார். இவ்வரிகளின் மூலம் சுத்தத்திற்கும் சுகத்திற்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டுகிறார்.

நோய் இல்லாமல் வாழ்வதற்குக் காலை மாலை கட்டாயம் உலவி வரவேண்டும் என்று கூறுகிறார். ஒருவர் இம்முறையைத் தவறாது பின்பற்றும்போது உயிரைப் பறிக்கும் எமன் அவரின் காலைத் தொட்டு வணங்கி விரைந்து சென்றுவிடுவான் என்று கூறுகிறார். இங்கு இறப்பைத் தடுக்கும் வழிமுறையைக் கூறுகிறார்.

அதுமட்டுமல்ல நாட்டை ஆளுகின்ற அரசன் தன்னால் முடிந்த வேலையைச் செய்துவந்தால் வைத்தியர் அவனுடைய கையைப்பிடித்து உடல்நலம் குறித்து நாடித்துடிப்பைப் பார்க்கவேண்டாம் என்று கூறுகிறார். எல்லாரும் முடிந்தவரை வேலையைச் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

அப்பா! நீ கூழைக் குடிக்கும் நிலைமை ஏற்பட்டாலும் குளித்த பின்புதான் அக்கூழைக் குடிக்கவேண்டும் என்றும் ஏழையாக இருந்தாலும் இரவில் நன்றாக நீ தூங்கவேண்டும் என்றும் கூறுகிறார். கவிஞர் தூக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார்.

மேலும், சாப்பிடும் உணவை அளவோடு சாப்பிடாமல் அள்ளி அள்ளித் தின்பவருக்குத் திட்டு முட்டு அடித்துவிடும் என்று கூறுகிறார். திட்டு முட்டு அடித்திடும்போது தினமும் நோயாளியாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு பாயில் படுக்கும் நிலை உருவாகும் என்று கூறுகிறார். இங்கு உணவுக் கட்டுப்பாட்டின் அவசியத்தை எடுத்துரைக்கின்றார்.

அப்பா! நோய் நம்மைவிட்டு விலகிச்செல்வதற்குத் சுத்தமான காற்றும், நல்ல தண்ணீரும், பசித்து உண்ணும் உணவுப் பழக்கமும் உடையவராக நீ விளங்க வேண்டும் என்று கூறுகிறார்.

இவை அனைத்தும் கிடைப்பதற்கரிய உடல் நலத்துடன் வாழ்வதற்கு உரிய வழிகள் என்பதை நீ அறிந்துகொள். இவற்றைப் பின்பற்றி வரும் நோயைத் தடுத்து இவ்வுலகம் புகழும்படி நீ வாழவேண்டும் என்று நயமாகக் கூறி முடிக்கின்றார் கவிஞர்.


சொல்லாட்சி

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை `உடல் நலம் பேணல்` என்ற தலைப்பில் அமைந்துள்ள இக்கவிதையில் சொற்களைச் சிறந்த முறையில் கையாளுகின்றார். கவிதையின் தொடக்கத்தில் `இடமும் பொருளும்` என்று கூறும்போது `உம்` ஒட்டைப் பயன்படுத்திப் படிப்பவர் எளிதில் புரிந்துகொள்ளும்படி சொற்களை இணைத்து அமைத்ததோடு இரண்டிற்கும் சம மதிப்பினையும் கொடுக்கிறார்.

இரண்டாவது பத்தியில் `சுத்தம்` `நித்தம்` என்னும் சொற்களைக் கையாளும்போது முதல் எழுத்துகளை மாற்றிப் பொருள் மாறுபாட்டை ஏற்படுத்துகிறார். இங்குச் `சுத்தம்` என்பது தூய்மை என்ற பொருளையும் `நித்தம்` என்பது நாள்தோறும் என்ற பொருளையும் உணர்த்துகின்றன. இவை சிறந்த எதுகைகளாகவும் அமைந்துள்ளன.

இரண்டாவது பத்தியிலும் மூன்றாவது பத்தியிலும் `காலை` `மாலை` என்ற இரண்டு சொற்களை எதுகை நயம்பட அமைத்துள்ளார். அத்துடன் அச்சொற்களில் உள்ள முதல் எழுத்துகளை மாற்றிப் பொருளை மாற்றுகிறார். மூன்றாவது பத்தியில் `ஆளும் நாளும்` என்று குறிப்பிட்டுச் சிறந்த நயத்துடன் சொற்களை அமைத்துள்ளார்.

மேலும், கூழை, ஏழை, மட்டு, திட்டு ஆகிய எளிய சொற்களின் முதலெழுத்தை மாற்றிப் பொருள் மாறுபாட்டுடன் கவிதையைப் படைத்துள்ளார்.

அப்பா! என்ற சொல்லை எங்கு எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்பதைக் குடி அப்பா!, உறங்கப்பா!, ஓட்டி விடுமப்பா!, நூறுவயது தருமப்பா!, என்று நன்கு பயன்படுத்தி விளக்குகிறார்.


வினாக்கள்

1
நூறுவயது வரை ஒருவர் வாழ்வதற்கு எவற்றையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை குறிப்பிடுகிறார்?
2
அனைவரும்நோயில்லாமல் வாழ்வதற்கு என்னென்ன நடவடிக்கைகளில்
ஈடுபடவேண்டும் என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை குறிப்பிடுகிறார்?
3
உணவு உண்ணும் முறையைப் பற்றிக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை கூறும் கருத்துகள் எவை?
4
இனிய வாழ்வு வாழ்வதற்கு ஒருவர் எவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை குறிப்பிடுகிறார்?
5
இக்கவிதையில் அமைந்துள்ள கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

No comments:

Post a Comment