Sunday, October 24, 2010

பயிற்சி 35
கவிதையின் கருத்தும் நயமும் இங்கே இடம்பெற்றுள்ளன. அவற்றைப் படித்த பின்னர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை எழுதவும் – கவிதையை எழுதிய ஆசிரியருக்கு நன்றி.


கவிதை 1. `முன்னேற` - கவிஞர் கண்ணதாசன் எழுதிய கவிதை. அவருக்கு நன்றி .

கவிதையின் கருப்பொருள்:

ஒரு நாடு முன்னேற்றம் அடைவதற்கு எத்தகைய முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்பதைப் பற்றியும் அவற்றின் மூலம் அந்த நாடு அடைகின்ற உயர்வினைப் பற்றியும் விளக்குவதாக இக்கவிதை அமைந்துள்ளது.

பொருள் நயம்:

கவிஞர் கண்ணதாசன் எழுதிய `முன்னேற` என்ற தலைப்பில் அமைந்த இக்கவிதை எல்லா நாட்டிற்கும் பெரும்பாலும் பொருந்துவதாக அமைந்துள்ளது. ஆனால், இந்தியச் சூழ்நிலையை மையமாக வைத்தே எழுதப்பட்டுள்ளது. உழைப்பின் பெருமையையும் மக்கள் உழைப்பதால் அடையும் நன்மைகளையும் நயம்படக் கூறுவதாக அமைந்துள்ளது.

இக்கவிதை ஒரு நாட்டில் இருக்கும் பிரச்சினையையும் அந்தப் பிரச்சினை தீர்வதற்கு என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்பதையும் அதன்மூலம் எத்தகைய நன்மைகள் தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படும் என்பதையும் நயம்பட விளக்குகிறது.

இன்றைய சூழலில் உலகத்தில் உள்ள மற்ற நாடுகளைப் போல் முன்னேற்றம் அடையவேண்டுமானால் அறிவியல் துறையில் முன்னேற்றம் அடையவேண்டும். அதனை உலக நாடுகளின் செயல்பாடுகளைப் பறந்துசென்று உலகத்தையே அளந்து பார்த்து அடைவோம் என்று கவிஞர் குறிப்பிடுகிறார். இக்கவிதையின் தொடக்கத்தில் எத்தகைய முயற்சியை ஒருநாடு எடுக்க வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்குகிறார்.

எண்ணெயின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். அந்த எண்ணெய் எங்கிருந்து கிடைக்கிறது என்பதையும் அதனை எடுத்துப் பயன்படுத்தும்போது அடைகின்ற பயன்பாடு என்னென்ன என்பதையும் விளக்குகிறார். புதுப்புது நெல்வகையைக் கண்டுபிடிப்போம். அப்போதுதான் உணவுப் பிரச்சினை தீரும். அதற்கு அடுத்தாற்போல் விண்ணை நோட்டமிடவேண்டும் என்று கூறுகிறார். இதன் மூலம் நலமான வாழ்வு அமைந்திடும் என்கிறார்.

வளமான ஆற்றிலிருந்து காய்ந்துபோன ஆற்றிற்குத் தண்ணீரைக் கொண்டு சென்றால் மட்டும்போதாது அதன் கரைகளில் புதிய சோலையை உருவாக்குவோம் என்கிறார். தண்ணீரைத் தேக்கி வைப்போம் என்று கூறாமல் அதனைத் தேக்கிவைக்கும்போது என்னென்ன செயல்பாடுகளில் ஈடுபடலாம் என்பதையும் விளக்கிக் கூறுகிறார்.

ஏராளமான தொழில்களை உண்டாக்குவோம் என்று கூறாமல் அத்தொழில்களை ஏற்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் எவை என்பதைப் பட்டியலிடுகிறார்.

திசை எட்டிலும் வெற்றியின் சிறப்பு ஏற்படுவதோடு வாழ்க்கையில் நாள்தோறும் இன்பம் நிறைந்திருக்கும் என்று கவிஞர் கூறுகிறார். இவ்வெற்றியின் மூலம் செல்வம் கோடிக்கணக்கில் சேர்ந்திடும்போது அதில் உனக்கும் பங்குண்டு. எனவே, அறிவியலில் முன்னேற்றம் அடைவோம் என்று நயம்படக் குறிப்பிடுகிறார்.

வினாக்கள்

1
ஒரு நாடு முன்னேற்றம் அடைவதற்கு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?
2
வேளாண்மைத் தொழில் ஒருநாட்டில் வளமடைவதற்கு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கவிஞர் கண்ணதாசன் குறிப்பிடுகிறார்?
3
ஒருநாட்டில் வேளாண்மைத் துறையும் தொழில்துறையும் வளர்ச்சி அடைவதற்கு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்?
௪ நீர்ப்பாசனத்தின் வளத்தினை அதிகரிப்பதற்கு ஒரு நாடு எத்தகைய
நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்?

வேளாண்மைத் துறை வளர்ச்சியடையும்போது ஏற்படும் நன்மைகள் யாவை?

No comments:

Post a Comment