கவிதை நயம்
கவிதை 1. `இளமை`
இளமை
கற்பனை மிகுந்ததும் இளைஞர்மனம்
கவிதைக் குகந்ததும்
இளைஞர்மனம்
அற்புத உணர்ச்சிகள் அலைபுரளும்
ஆனந்தம் வாலிப நிலைதரும்
துள்ளி மகிழ்வதும் இளமைப்பருவம்
துடிதுடிப் புடையதும்
இளம்பருவம்
அள்ளித் தருவதும் அதன்பெருமை
ஆர்வமும் ஆற்றலும்
அதன்உரிமை.
இன்பம் குளிப்பதும் இளம்பருவம்
ஈகையிற் களிப்பதும்
இளம்பருவம்
துன்பம் நேரினும் மலைக்காது
துக்கம் அதனிடை நிலைக்காது
சோம்பலை ஒழிப்பதும் வாலிபமாம்
சோர்வினைப் பழிப்பதும்
வாலிபமாம்
நோன்பென நித்தமும் படிக்கும்
நுண்ணறி வாகிய பால்குடிக்கும்
புதுமையை விரும்புதல் அதன்உடைமை
புரட்சிகள் அரும்புதல்
அதனிடையே
முதுமையின் பெருமையை எள்ளாது
மூடப் பழக்கமும் கொள்ளாது
-
நாமக்கல்
கவிஞர் ராமலிங்கம் பிள்ளை
|
முன்னுரை விளக்கம்:
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் எழுதிய `இளமை` என்ற தலைப்பில்
அமைந்த இக்கவிதை அனைத்து நாட்டு
இளைஞர்களுக்கும் ஏற்ற ஒரு
மிகச்சிறந்த கவிதையாக அமைந்துள்ளது. மாணவப் பருவத்தில் கட்டாயம் படித்து அறிந்துகொள்ளவேண்டிய அற்புதமான கவிதையாகும். இக்கவிதையில் இளமைப்பருவத்தில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் பற்றியும்
அப்பருவம் மனிதனுடைய வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் வாந்த
ஒரு பருவமாக அமைந்துள்ளது என்பதையும் பற்றிக் கவிஞர் குறிப்பிடுகிறார்.
கவிதையின்
கருப்பொருள்:
இளமைப் பருவத்தின் சிறப்பினையும்
அப்பருவத்தில் செய்யவேண்டிய செயல்களைப் பற்றியும் விளக்குவதாக இக்கவிதை அமைந்துள்ளது.
கருத்து
`இளமை` என்ற தலைப்பில் அமைந்துள்ள இக்கவிதை
மக்களை எளிதில் கவரும் பாங்கில் மிகவும் எளிய சொற்களைக்கொண்டு எழுதப்பட்டுள்ளது.
இளமைப்பருவம் கற்பனை நிறைந்தது, கவிதைக்குச் சிறந்தது. இப்பருவத்தில் வியக்கத்தகுந்த உணர்ச்சிகள் மனத்தில் அலையாய் உருளும்,
ஆனந்தம் நிறைந்திருக்கும்.
மேலும், துள்ளி மகிழ்வதும், துடி துடிப்பு
நிறைந்ததும் இளமைப் பருவம் என்கிறார். இப்பருவத்தின் பெருமை கணக்கிடாமல் அள்ளித்தருவதே ஆகும். ஆர்வத்துடனும்
ஆற்றலுடனும் ஒன்றைச் செய்வதற்கு ஏற்றப் பருவமும் இப்பருவமே என்கிறார்.
இப்பருவம் இன்பம் நிறைந்தது (நனைவது, குளிப்பது). உதவி அவசியம் தேவைப்படுவோருக்குக்
கொடுத்து மகிழக்கூடிய
பருவம். இப்பருவத்தில் துன்பம்
ஏற்பட்டாலும் தயங்காமல் இருப்பதால், துக்கம் ஏற்பட்டாலும் மறைந்துவிடும்.
இப்பருவம் சுறுசுறுப்பு நிறைந்த பருவம், களைப்பைக்
குறைகூறும் பருவம், நாள்தோறும் படிப்பதைக் கடமையாகக் கொண்டு நுண்ணறிவாகிய அறிவுப் பாலைக் குடிக்கும்
பருவம்.
மாற்றங்கள் நிறைந்த புதுமை படைத்திடும் பருவம், இப்பருவம் முதுமை அடைந்தவர்களைக் குறைசொல்லாமல் மூடப்பழக்கத்தைப் பின்பற்றாமல் இருக்கும் பருவம்.
கருத்து நயம்
கவிஞர் சொல்விரும்பிய கருத்துகளை அழகுபடக் கூறுவது கருத்து
நயம் ஆகும். பொதுவாக, மனிதனின் மனம்
கற்பனையும் கவிதை ரசனையும், உணர்ச்சியும் மகிழ்ச்சியும் நிறைந்திருந்தாலும் அவை
சிறப்பாக அமைவதற்கு ஏற்றப் பருவம் வாலிபப் பருவமே என்கிறார். இங்கு வாலிபப் பருவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்.
வாலிபப் பருவத்தை மகிழ்ச்சியோடும் உயிரோட்டத்துடனும்
வைத்துக்கொள்வதோடு, எந்த ஒருசெயலையும் ஆர்வத்தோடு ஆற்றலுடன் செய்வதற்கு
முற்படவேண்டும் என்பதையும் பற்றிக் கவிஞர் குறிப்பிடுகிறார்.
இப்பருவத்தில் இனப மழையில் குளிக்கவேண்டும் என்கிறார். தேவைப்படுவோருக்குக் கொடுத்து மகிழ்வதோடு
துன்பத்தைக் கண்டு அஞ்சாமல் எதிர்த்து நிற்கவேண்டும் என்றும் கூறுகிறார். இதன்
மூலம் நெஞ்சில் உறுதி வேண்டும் என்ற கருத்தை வலியு றுத்துகிறார்.
இப்பருவத்தில் சுறுசுறுப்பாகச் செயல்படுதல், களைப்பை விரட்டுதல், அறிவுப் பாலைக் குடிக்க நாள்தோறும் படித்தல்
போன்றவற்றில் ஈடுபடுதல் வேண்டும் என்கிறார்.
இதுபுத்தாக்கச் சிந்தனை நிறைந்த பருவம், அதில் மாற்றம் நிறைந்திருக்கவேண்டும்
என்கிறார். அதோடு முதுமைப் பருவத்தின் பெருமையை உணர்ந்துகொள்ளவேண்டும்
மூடப்பழக்கத்தைப் பின்பற்றக்கூடாது என்றும் அறிவுரை கூறுகிறார். இதன் மூலம்
இளைஞர்களுக்குச் சொல்லவேண்டிய கருத்துகளை மிகவும் அழகாகக் கூறுகிறார்.
சொல்லாட்சி
கவிதையின் சிறப்பு அதில் அமைந்துள்ள சொல்லடுக்குகளைப்
பொருத்துத்தான் அமைகிறது.
கவிதையின் தொடக்கத்தில் ‘கற்பனை மிகுந்ததும் கவிதைக் குகந்ததும்’ என்று கூறும்போது ‘உம்’ ஒட்டைப் பயன்படுத்திப் படிப்பவர் எளிதில் புரிந்துகொள்ளும்படி சொற்களை இணைத்து அமைத்ததோடு இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பை வலியுறுத்துகிறார்.
அதாவது கவிதையின் முதுகெலும்பாகக் கற்பனை விளங்குகிறது. கற்பனை இல்லாத கவிதை சுவை இல்லாத தேனுக்குச் சமம்.
மோனை
முதல் எழுத்து ஒன்றி வருவது
முதல் பத்தியில் வரும் கற்பனை, கவிதை, அற்புத, அலைபுரளும் ஆகியசொற்களையும்
நான்காவது பத்தியில் சோம்பலை, சோர்வினை ஆகியசொற்களையும் மோனை நயத்துடன் அமைக்கிறார்.
மேலும், ஐந்தாவது பத்தியில் புதுமை, புரட்சிகள் ஆகிய சொற்களைப் பயன்படுத்தி மோனை நயத்தை அமைக்கிறார்.
ஓசை நயம்
அலைபுரளும், நிலைதரும், மலைக்காது, நிலைக்காது, படிக்கும், பால்குடிக்கும், எள்ளாது, கொள்ளாது ஆகிய சொற்களின் அமைப்பு சிறந்த ஓசை நயத்துடன் விளங்குகின்றன.
வினாக்கள்
1. கொடுக்கப்பட்ட கவிதைத் துணுக்குகளைப் படித்து அதன் நயத்தை விளக்கி எழுதுக. உமது விடை கவிதையில் இடம்பெற்றுள்ள கருத்துகள், உவமை நயம், சொல்லாட்சி, ஓசைச்சிறப்பு முதலிய கூறுகளையொட்டி அமையலாம்.
________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
No comments:
Post a Comment