Saturday, August 29, 2009

பிரிவோம் சந்திப்போம்

கவிதையைப் படித்த பின்னர் அதில் அமைந்துள்ள கவிநயத்தை விளக்கி எழுதி ஆசிரியரிடம் சரிபார்த்துக்கொள்ளவும்


பட்டம் பெறுவோம்
பாரினில் உயர்வோம்
கூடி மகிழ்வோம்
குற்றம் காணோம்

இல்லறம் இணைவோம்
நல்லறம் புரிவோம்
இன்றுபோல் என்றும்
இணைந்து இருப்போம்

சாதித்து நிற்போம்
சந்ததி தொடர்வோம்

சந்திப்போம் பிரிவோம்
பிரிவோம் சந்திப்போம்!

- எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி



கவிதையைப் படித்த பின்னர் உனக்குப் பிடித்த வரியைத் தேர்வு செய்து அது பிடித்ததற்கான காணங்களை விளக்கி எழுதிய பின்னர் சரிபார்க்கவும்.


அன்பைப் பெருக்கி
ஆற்றலை வளர்த்து
இல்லாமை நீங்கி
ஈன்றோரை மதித்து
உள்ளம் நிறைந்து
ஊருக்கு உதவி
எந்நாளும் சிறந்து
ஏறுபோல் நின்று
பல்லாண்டு வாழ
நெஞ்சார வாழ்த்துகிறது
செயலினை எண்ணி
நம்நிலையம் உங்களை!

- எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி

Tuesday, August 25, 2009

நனைந்த காலம்

கீழ்க்கண்ட பாடலைப் படித்தபின்னர் அதன் கருத்தினையும் நயத்தினையும் எழுதுக.

நனைந்த காலம்

அந்தக் காலம் இந்தக் காலம்
எந்தக் காலம் நம்ம காலம்
சொந்தக் காலம் வந்தகாலம்
சொர்க்கம் தந்த நல்ல காலம்!

சோகம் மறந்த நம்ம காலம்
சொல்லிக்கொள்ளும் இன்பக் காலம்
பள்ளிசென்று பறந்த காலம்
பாசம் நிறைந்த அன்புக் காலம்!

கல்வி வளர்ந்த வசந்தகாலம்
கல்லூரி சென்ற நம்ம காலம்
உள்ளம் செழித்து நனைந்த காலம்
உறவை வளர்த்த இல்லறக் காலம்!
- குருசா

Saturday, August 8, 2009

இலக்கியம் - இலக்கியம் - கவிதையும் நயமும்


கவிதையும் நயமும்

கொடுக்கப்பட்டுள்ள கவிதைகளைப் படித்து அவற்றின் நயத்தினை விளக்கி எழுதுக. உமது விடை கவிதைகளில் இடம்பெற்றுள்ள கருத்துகள், சொல்லாட்சி முதலிய கூறுகளையொட்டி அமையலாம்.


பள்ளி திறக்கும் நேரம்

பள்ளிசெல்லும் காலம்
பார்த்துநிற்கும் கோலம்
முந்திப்பறக்கும் நேரம்
முனங்கிச்செல்வோம் நாமே!

இன்பமான காலமிதனை
என்றும்நினைப்போம் நாமே
துன்பம்வந்த போதும்
துவண்டிடாமல் செல்வோம்!

பச்சைவண்ணம் நமக்குப்
பாதை காட்டும்போது
இச்சையுடன் நாமும்
இன்பமாகச் செல்வோம்!

அங்குமிங்கும் திரும்பாது
அண்ணன்தம்பி நினையாது
பள்ளிசெல்ல நினைப்போம்
பாதைபார்த்து நடப்போம்!

அன்புதனைப் பெருக்கி
அனைவரையும் மதிப்போம்
இன்பம்பல பெற்றிட
இல்லோரை நேசிப்போம்!
உள்ளவரை சிறந்திட
உண்மையை அறிந்திடுவோம்
பண்புதனைக் கற்றுக்
பார்போற்ற வாழ்ந்திடுவோமே!


எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி

இலக்கியம் - கவிதையும் நயமும் -

கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை அளிக்கவும்



1 நாம் நம் உடல்நலத்தை எவ்வாறெல்லாம் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை குறிப்பிடுகிறார்?

குறிப்பு:

உடலில் உறுதியுடையோர் அடையும் நன்மைகள்- சுத்தமுள்ள இடத்தின் நன்மைகள் - உடற்பயிற்சி செய்வதன் நன்மைகள் - உணவு உண்ணும் முறை – வருமுன் நோயைக் காக்கும் வழிமுறைகள் - போன்ற அமைப்பில் விடை அமைந்தால் சிறப்பாக இருக்கும்.


2 இவ்வுலகம் முன்னேற்றம் அடைவதற்குக் கவிஞர் கண்ணதாசன் கூறும் வழிமுறைகளைத் தொகுத்து எழுதுக.

குறிப்பு:

விஞ்ஞானத்தில் முன்னேற்றம் அடைவதால் ஏற்படும் நன்மைகள் – மண்ணையும் விண்ணையும் ஆய்வு செய்யும்போது இவ்வுலகிற்கு ஏற்படும் நன்மைகள் - நீர்வளத்தால் ஏற்படும் நன்மைகள் - தொழில் வளத்தால் ஏற்படும் நன்மைகள் - போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைந்தால் சிறப்பாக இருக்கும்.


3 பெண்கல்வியின் அவசியத்தைப் பற்றிக் கவிஞர் வாலி குறிப்பிடும் கருத்தினைத் தொகுத்து எழுதுக.


குறிப்பு:

பெண்கள் ஏன் படிக்க வேண்டும்? - உலகம் பாராட்டும்படி படித்தல் – படிக்கும் முறை - உயர்ந்தோர் சொல்லிய கருத்துகள் – படிப்பின் மூலம் அடையும் நன்மைகள் - தேடிவரும் கணவன் - போன்ற கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்தால் சிறப்பாக இருக்கும்.


4 கோகிலா என்ன செய்து விட்டாள்? என்னும் குறுநாவலில் இடம்பெற்றுள்ள கோகிலாவின் பண்பு நலன்களைத் தக்க சான்றுகளுடன் விளக்கி எழுதுக.


5 கோகிலா என்ன செய்து விட்டாள்? என்னும் குறுநாவலில் இடம்பெற்றுள்ள அனந்தராமன் ஓர் அவசரப்புத்திக்காரன் என்பது பொருந்துமா? தக்க எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

6 நண்பனின் வருகைக்குப் பின்பு கோகிலா மற்றும் அனந்தராமனின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொகுத்து எழுதுக.


7 கோகிலா என்ன செய்துவிட்டாள்? என்னும் குறுநாவலின் மூலம் அதன் ஆசிரியர் ஜெயகாந்தன் கூறும் கருத்துகளை நீ ஏற்றுக்கொள்கிறாயா? தக்க சான்றுகளுடன் விளக்கி எழுதுக.

8 கோகிலா என்ன செய்துவிட்டாள்? என்னும் குறுநாவலில் கூறும் கருத்துகள் இன்றைய நடைமுறை வாழ்க்கைக்குப் பொருந்துமா? விளக்குக.


கவிதையும் நயமும்

கொடுக்கப்பட்டுள்ள கவிதைகளைப் படித்து அவற்றின் நயத்தினை விளக்கி எழுதுக. உமது விடை கவிதைகளில் இடம்பெற்றுள்ள கருத்துகள், சொல்லாட்சி முதலிய கூறுகளையொட்டி அமையலாம்.



எங்கள் நாடு

தங்கக்குணம் நிறைந்த
தங்கநிகர் நாடு
தரணியில் சிறந்த
எங்கள் நாடு
பொன்னும் பொருளும்
மிகுந்த நாடு
பொறுப்புள்ள தலைவர்கள்
பிறந்த நாடு!

மலையென மாண்பினை
மங்காப் புகழினை
மாறாப் பண்பினை
மகிழ்வுடன் பெற்றநாடு
பசுமையாய் தோன்றும்
பரவை நாடு
பார்க்கத் தூண்டும்
பார்போற்றும் நாடு!


உழைப்பின் உயர்வை
உணர்த்திடும் நாடு
உலகமே வியக்கும்
உயர்கலை நாடு
நான்கினம் வாழும்
நனிசிறந்த நாடு
நாளும் போற்றுவோம்
வாழ்க் வாழ்கவென்றே!


எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி

கோடிட்ட இடத்தை நிரப்புக-வாக்கியங்களை முடித்து எழுதுக- கட்டுரை எழுதும் பயிற்சி

கீழ்க்காணும் வாக்கியங்களில் கோடிட்ட இடங்களை நிரப்புவதற்கு ஏற்ற சொற்றொடர்கள் அடியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோடிட்ட இடத்தையும் நிரப்புவதற்கு ஏற்ற மிகப்பொருத்தமான சொற்றொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.



1 கோபு அலுவலகத்தில் அதிக வேலை இருந்ததால் வீட்டிற்குப் போனவுடன் _______________________ காணப்பட்டார்.


2 குழந்தைவேலு என்பவர் நண்பர்களைப் பற்றி ________________
கூறும் குணத்தை உடையவராக இருந்ததால் அவருடைய நண்பர்கள் அவரை விட்டு விலகினர்.


3 சபீர் சிறு சிறு தவறுகளைச் செய்யத் தொடங்கியபோதே அவனுடைய பெற்றோர் அவனை ____________________ திருத்தினர்.


4 மாறன் துணி வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தைப் பழ வியாபாரம் செய்து _____________________.




5 நாம் எப்பொழுதும் ______________________ இணைந்து வாழவேண்டும்








1 உற்றார் உறவினரிடம்

2 தட்டிக்கேட்டு


3 கண்ணீரும் கம்பலையுமாக

4 இல்லாததும் பொல்லாததும்

5 தட்டிக்கொடுத்து

6. ஈடுகட்டினார்

7. கதைகட்டும்

8. இனிக்கப்பேசி

9. ஆறப்போட்டார்


10. இளைத்துக் களைத்து




வாக்கியங்களை முடித்து எழுதுக.

பின்வரும் வாக்கியங்களைப் பொருத்தமான சொற்களைக் கொண்டு முடித்துக் காட்டுக. அவ்வாறு முடிக்கப்பெறும் வாக்கியங்கள் ஒவ்வொன்றும் அதற்கு முந்திய வாக்கியத்தின் கருத்தையே கொண்டிருக்க வேண்டும்.


6 ஒலிம்பிக் போட்டி உலக மக்களை இணைப்பதால் அதனை
அனைவரும் பாராட்டுகின்றனர்.

ஒலிம்பிக் போட்டியை அனைவரும் பாராட்டக் காரணமாக
இருப்பது ________________________________________________.


7 ராமன் தொடர்ந்து கடுமையாக உழைத்ததால் அறிவியல்
துறையில் பல சாதனைகள் புரிந்தார்.

அறிவியல் துறையில் பல சாதனைகளைப் புரிந்த ராமன்
_______________________________________________________.


8 நம் நாட்டின் புதிய பிரதமராகப் பதவி ஏற்ற திரு. லீ பல
புதிய திட்டங்களை அறிவித்தார்.


நம் நாட்டில் பதவி ஏற்ற புதிய பிரதமர் திரு. லீயால்
____________________________________________________.



9 நாம் புதிய செய்திகளைத் தெரிந்துகொள்ளும்போது நமது சிந்தனை வளம் பெறுகிறது.


நாம் புதிய செய்திகளைத் தெரிந்துகொள்ளாத போது _____________________________________________________


10
ஆரோக்கியம் தரும் உணவு நமக்குப் பலவழிகளில்
நன்மையைத் தரும்.

நாம் பல வழிகளில் நன்மையைப் பெற வேண்டுமானால்
______________________________________________________.

.

அமைப்புச் சொற்கள்

கீழ்வரும் பகுதியில் கோடிட்ட இடங்களை நிரப்புவதற்கேற்ற அமைப்புச் சொற்கள் பகுதியின் அடியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோடிட்ட இடத்தையும் நிரப்புவதற்கேற்ற மிகப் பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


ஒரு காலத்தில் தமிழ்நாடு மூன்று பிரிவுகளாகப் பிரிந்து இருந்தது. அப்பிரிவுகளைச் சேர சோழ பாண்டிய மன்னர்கள்
ஆட்சிசெய்து (11) _____________________________. அவர்கள் தங்கள் நிலப் பகுதியைப் பல சிறிய பகுதிகளாகப் பிரித்தனர்.
(12) _______________________ குறுநில மன்னர்கள் ஆட்சிசெய்து வந்தனர். அவர்களுள் ஒருவர் அதியமான் ஆவார். அவர் வீரத்திலும் (13) _____________________ சிறந்தவராக விளங்கினார். அவர் தமிழ் அறிந்த அறிஞர்களைப் போற்றி வந்தார். அவரின் நெருங்கிய நண்பராக ஔவையார் விளங்கினார். ஔவையார் சிறந்த புலமை பெற்றவர். அவரும் அதியமானை மிகவும் (14) _________________ வந்தார்.

அதியமான் வேட்டையாடுவதில் (15) _______________________ உடையவராக இருந்தார். ஒருநாள் அதியமான் வழக்கம் போல் மலைப்பகுதிக்கு வேட்டையாடச் சென்றார். அங்கு (16) ________________________ மலைப்பகுதி மக்கள் அம்மலையில் விளையும் நெல்லிக் கனியின் சிறப்பினைப் பற்றிக் கூறினர். அதனைக் கேள்விப்பட்ட அதியமான் (17) ______________________ ஆச்சரியப்பட்டார். அந்த நெல்லிக் கனியைப் பறிக்க நினைத்தார். எனவே, அவர் தம்முடன் வேட்டையாடுவதற்கு வந்தவர்களை அழைத்துக்கொண்டு மலையின் உச்சிக்கு (18) ________________________. அங்கு மிகப்பெரிய பாறைகளின் இடையே மிக உயரமாக வளர்ந்துள்ள மரத்தில் இருந்த நெல்லிக் கனியை (19) _______________________ . அதனைத் தம் அரண்மனைக்குக் கொண்டு வந்தார்.

ஔவையார் வழக்கம் போல் ஒருநாள் அதிமானைக் காண்பதற்கு அதியமானின் அரண்மனைக்கு வந்தார். அதியமான் ஔவையாரைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். (20) ___________________, அந்த நெல்லிக் கனியை வையாருக்கு உண்ணக் கொடுத்தார். ஔவையார் உண்டபின் அதியமான் அதன் சிறப்பைக் கூறி மகிழ்ந்தார்.



மிகவும்
பின்னர்
அவற்றை

வாழ்ந்த
தங்கிய
வந்தார்

அறிவிலும்
சென்றார்
ஆற்றலிலும்

எடுத்தார்
பலர்
போற்றி

வந்தனர்
ஆர்வம்
பறித்தார்

பின்வரும் கட்டுரைப் பகுதியைக் கருத்தூன்றிப் படித்து, அதனடியிற் காணும் வினாக்களுக்கு உம் சொந்த நடையில் விடை எழுதுக.


இயற்கையை வெல்லுகின்ற அளவிற்கு இன்றைக்கு அறிவியல் வளர்ச்சி மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு இவ்வுலகில் வாழ்ந்த அறிவியல் அறிஞர்கள் பலர் மிகவும் கடுமையாக உழைத்துள்ளார்கள். அவர்களின் வழிவந்த இன்றைய அறிவியல் அறிஞர்கள் தொடர்ந்து பல ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வுகள் காலத்திற்கு ஏற்ற தேவைகளை நிறைவேற்றி வருகின்றன.

மனிதனின் தேவையின் பொருட்டுக் காலங்காலமாகப் புதிய கண்டுபிடிப்புகள் இருந்து வருவதை நாம் காணலாம். இயற்கையாக நிகழ்ந்த சம்பவங்களிலிருந்து நெருப்பின் பயனைக் கற்றுக் கொண்டான். மேலும், ஒளி வெப்பம் ஆகியவற்றின் ஆற்றலை அறியத் தொடங்கினான். காலப்போக்கில் மனிதன் சுட்ட செங்கற்களைச் சுண்ணாம்புப் பொருள்களைக் கொண்டு கட்டடங்கள் கட்டத் தொடங்கினான். அவ்வாறு கட்டப்பட்ட கட்டடங்கள் இன்று பல மாடிக்கட்டடங்களாக உருப்பெற்று வருவதை நாம் காணலாம்.

இன்றைய உலகில் இருக்கும் அனைத்துக் கண்டுபிடிப்புகளும் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு உள்ளன. இந்தத் தேவையை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். அவற்றுள் ஒன்று தனிமனிதனின் தேவை ஆகும். இது ஒருமனிதனின் எண்ணம் மற்றும் சூழ்நிலையைப் பொறுத்து அமைகிறது. தனிமனிதனின் தேவைதான் இவ்வுலகில் முதலிடத்தைப் பெறுகிறது. இது ஒவ்வொருவரின் விருப்பத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. இந்தத் தேவை நிறைவேறுவதைப் பொருட்டுத் தனிமனிதனின் வாழ்க்கை முறை அமைகிறது.

தனிமனிதனின் தேவைகளைப் போல் சமுதாயத்திற்கென்று சில தேவைகள் இருக்கின்றன. இத்தேவைகள் ஒரு சமுதாயம் மிகவும் சிறப்பாகச் செயல்படுவதற்கு உதவக் கூடியனவாக இருக்கவேண்டும். அவற்றுள் முதல் தேவையாக இருப்பது
கல்வி அறிவைப் பெறுவதே ஆகும். காலத்திற்கு ஏற்ற மிகப் பொருத்தமான கல்வியைப் பெற்ற சமுதாயம் மிகவும் வேகமான வளர்ச்சியைப் பெறுகிறது.

கல்வியறிவு ஒரு சமுதாயத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்கிறது. அதனால் கல்விமுறையில் சமூக மரபுகளும் பண்பாட்டுக் கூறுகளும் கட்டாயம் அமைய வேண்டும். இவை அச்சமுதாயத்தைச் சார்ந்த முன்னோர்கள் சேர்த்துவைத்த அரிய செல்வங்கள் ஆகும். இவற்றைத் தொடர் நடவடிக்கைகளாகச் சமுதாயம் பின்பற்ற வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் இவற்றை அச்சமுதாயம் கைவிடக்கூடாது. அப்படிக் கைவிடும் சூழ்நிலை ஏற்பட்டால் காலப்போக்கில் அச்சமுதாயம் தனக்கு உரிய அடையாளத்தை இழந்துவிடும். இக்கூறுகளைப் பெறுகின்ற சமுதாயமாக அமையாவிட்டால் அந்தச் சமுதாயம் அறிவை மட்டும் பின்பற்றுகின்ற சமுதாயமாகத்தான் அமையும்; பண்பும் கனிவும் மிக்க சமுதாயமாக அமையாது.

எனவே, வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் இன்றைய இயந்திர உலகில் அழியாச் செல்வமாக இருக்கக் கூடிய கல்விச் செல்வத்துடன் பண்பாட்டுச் செல்வத்தையும் கட்டாயம் ஊட்டி வளர்க்க வேண்டும். இப்படி வளர்த்தால் ஒரு நாடு தலைசிறந்த நாடாக விளங்க முடியும். இவற்றால் அந்நாடு படிப்படியாக வளர்ச்சி அடைந்து காலப்போக்கில் நிலைத்த வளமுடைய பொருளாதாரத்தைப் பெறமுடியும்.


வினாக்கள்

21. மனிதர்களின் இடைவிடாத் தேவைகளை நிறைவேற்றுபவை
யாவை?

________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

22. ஆதிமனிதன் தன் தேவைகளை எப்போது அறிந்து
கொண்டான்?

________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

23. கல்விமுறை ஒரு சமுதாயத்திற்கு எப்போது பயன்மிக்க
ஒன்றாக அமையும்?
________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

24. ஒரு சமுதாயம் எப்போது முழுமைபெற்ற சமுதாயமாக
அமையும்?

________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________



சொற்பொருள்

கீழ்க்காணும் சொற்கள் மேற்கண்ட பகுதியில் இடம்பெற்றுள்ளன. அச்சொற்களின் பொருளை எழுதுக.


25. ஆற்றலை ______________________
26. மாறுபடுகிறது ______________________
27. பொருத்தமான ______________________
28. உரிய ______________________
29. கட்டாயம் ______________________




கட்டுரை எழுதும் பயிற்சி


கீழ்க்காணும் தலைப்பில் 170 சொற்களுக்குக் குறையாமல் கட்டுரை ஒன்று எழுதுக.

1. இணைப்பாட நடவடிக்கைகளால் மாணவர்கள் அடைந்துவரும்
நன்மைகளை விளக்கிக் கட்டுரை ஒன்று எழுதுக.


அமைப்பு முறை

கட்டுரை முன்னுரை, பொருள் பகுதி, முடிவுரை என்ற அமைப்பில் அமைந்திருக்க வேண்டும்.

முன்னுரையில் கட்டுரையின் தலைப்பின் விளக்கமும் நோக்கமும் இடம்பெற்றிருக்க வேண்டும்.

பொருள்பகுதியில் இணைப்பாட நடவடிக்கையின் மூலம் மாணவர்கள் அடைந்துவரும் நன்மைகள் பற்றிய விளக்கம் இடம்பெறவேண்டும்.

முடிவுரையில் எழுதிய அனைத்துக் கருத்துகளின் சுருக்கம் இடம்பெற வேண்டும்.

முன்னுரை (மாதிரி அமைப்பு முறை)

மாணவர்களின் நலம் கருதி பள்ளிகளில் இணைப்பாட நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை மாணவர்களின் மனநிலையையும் உடல் நிலையையும் சிறப்பாக வைத்திருக்க மிகவும் உதவி செய்கின்றன. கல்வி ஒன்றே மாணவர்களை முழுமனிதர்களாக மாற்றும் என்று சொல்லமுடியாது. கல்வியோடு இணைப்பாட நடவடிக்கைகளும் சேரும்போது மாணவர்களின் உடலும் உள்ளமும் வலுப்பெறுகின்றன. ஆக்கப்பூர்வமான சிந்தனை வளர்ச்சி அடைகிறது. மாணவனுக்கும் சமூகத்திற்கும் நன்மைகள் பல ஏற்படுகின்றன. இவற்றை விளக்கி இங்கே எழுதப்போகிறேன்.



விளக்கம்

உடலுக்கு ஏற்படும் நன்மைகள்

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி செய்கின்றன. உடல் வலுப்பெறுகின்றது. நோய்நொடி இல்லாமல் நீண்ட காலம் வாழலாம். நன்றாக உழைக்கலாம், நிம்மதியாக வாழலாம்.


மனத்திற்கு ஏற்படும் நன்மைகள்

மனம் புத்துணர்ச்சி பெறுகின்றது. இணைப்பாட நடவடிக்கைகள் கல்வியில் கவனம் செலுத்துவதற்கு மிகவும் உதவி செய்கின்றன. மனம் சிறந்த ஓய்வைப் பெறுகின்றது.

சமூகத்திற்கு ஏற்படும் நன்மைகள்

நல்ல குடிமக்கள் உருவாகுவார்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்வார்கள் - சமூகத்தொடர்பை வளர்க்கும்

நாட்டிற்கு ஏற்படுத்தும் நன்மைகள்

இந்நடவடிக்கைகளின் மூலம் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் உலக நாடுகளில் தனித்தன்மை பெற்றவர்களாக விளங்குவார்கள். இதன் மூலம் நம் நாட்டின் பெருமை உலக அரங்கில் உயர்ந்து நிற்கும்
.

முடிவுரை எழுதிய கருத்துகள் அனைத்தையும் சுருக்கமான விளக்கத்துடன் தொகுத்து எழுதவேண்டும்.

தனிமனிதன் சமூகம், நாடு ஆகியவற்றிற்கு ஏற்படும் நன்மைகளைத் தொகுத்து எழுதவேண்டும்.

************************************************************************